மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் சாதனை.. தொடர்ந்து 3-வது உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது
பாஸ்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
பாஸ்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் மொராக்கோ அணி வலுவான தடுப்பாட்டத்தை கொண்டு ஆடியது. அதை உடைக்க முடியாமல் பிரான்ஸ் அணி திணறியது. மேலும், பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே அடித்த பெனால்டி வாய்ப்பை மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ அபாரமாகத் தடுத்து நிறுத்தினார்.

அர்ஜென்டினா நடுவர் ஃபகுண்டோ டெல்லோ விஏஆர் பரிசீலனைக்காக 3 நிமிடம் எடுத்துக் கொண்டது சர்ச்சை ஆனது. அந்த தாமதத்திற்குப் பிறகு இந்த பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பும் வீணானது. மேலும் லூகாஸ் டிக்னே அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.
ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம்பாப்பே ஒரு அற்புதமான கோல் அடித்து பிரான்ஸை 1 - 0 என முன்னிலை பெறச் செய்தார். இது இந்த கால்பந்து உலகக்கோப்பையில் எம்பாப்பேவின் 8-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அவர் லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அடுத்த 6 நிமிடங்களில், அதாவது 66-வது நிமிடத்தில் எம்பாப்பே கொடுத்த பாஸைப் பெற்று உஸ்மான் டெம்பேலே இரண்டாவது கோலை அடித்து பிரான்ஸின் வெற்றியை 2-0 என உறுதி செய்தார்.
மறுபுறம், காயம் காரணமாக நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி இல்லாதது மொராக்கோ அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அசெடின் உனாஹி கோல் அடிக்க முயன்ற போது பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மைக்னான் அதை தடுத்து நிறுத்தினார். ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என வெற்றி பெற்றது.
2018-ல் சாம்பியன், 2022-ல் ரன்னர்-அப் ஆகிய பெருமைகளைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அரையிறுதிக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்று உலகக்கோப்பைகளில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது பிரான்ஸ்.


Click it and Unblock the Notifications

