ரோஸ்டோவ்: சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் பயணித்த விமானத்தின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அதிருஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.
ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவும் பங்கேற்றுள்ளது. துவக்க ஆட்டத்தில் ரஷ்யாவுடன் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோல்வியடைந்தது.

இந்த நிலையில், அடுத்த போட்டியில் உருகுவேவிற்கு எதிராக ஆட உள்ளனர். புதன்கிழமை நடைபெற உள்ள இப்போட்டியில் பங்கேற்க சவுதி வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ரஷ்யாவின் ஏர்பஸ்ஸ ஏ319 ரக விமானத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்கு அவர்கள் விமானத்தில் நேற்று பயணித்தபோது, விமானம் தரையிறங்கிய நேரத்தில் இன்ஜினில் தீ பிடித்தது. இதையடுத்து அவசரமாக வீரர்கள் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் பறவை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனிடையே விபத்து நடந்த விமானத்தின் படங்கள் உள்ளூர் மீடியாக்களால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், விபத்துக்கு பிறகு, சவுதி வீரர்கள் பதற்றமின்றி உள்ள படங்களும் ஷேர் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சவுதி வீரர்கள் பத்திரமாக உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.