
அர்ஜெண்டினா வெற்றி
இந்த வெற்றியின் மூலம் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது. கோல்டன் பால், கோல்டன் ஷூ என கால்பந்தில் உள்ள முக்கிய விருதுகள் மற்றும் கோப்பைகளை வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக்கோப்பை வெற்றியை சுவைப்பது மட்டும் நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்து வந்தது. எனினும் அந்த ஆசையை தனது 35 வயதில் நிறைவேற்றி முழுமையாக சந்தோஷத்தை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியையும் தனது சாதனைகளுடன் தான் பெற்றிருக்கிறார்.

பிரமாண்ட ரெக்கார்ட்
இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த 2 கோல்கள் தான் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இதற்காக ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஒரே உலகக் கோப்பை தொடரில் 5 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற பெரும் சாதனையை மெஸ்ஸி படைத்தார். மேலும் தனது 2வது கோல்டன் பால் விருதையும் பெற்றார்.

புது சர்ச்சை
இந்நிலையில் இத்தகைய பெருமைகளுக்கு இடையே மெஸ்ஸி மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போட்டி முடிந்தவுடன் கத்தார் ஆட்சியாளர் தமிம் ஹமாத் அந்நாட்டின் கவுரவிமிக்க Bisht அங்கியை மெஸ்ஸிக்கு அணிவித்து கவுரப்படுத்தினார். இந்த அங்கியானது அரபிய போரில் வெற்றி கண்டவர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புமிக்க ஒன்றாகும். இதனை மெஸ்ஸிக்கு அணிவித்தனர்.

காரணம் என்ன
ஆனால் அந்த ஆங்கியானது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜெண்டினா ஜெர்ஸியை மறைத்தது. அதை கலட்டாமல் அதே கருப்பு நிறம் கொண்ட ஆடையில் தான் மெஸ்ஸி உலகக்கோப்பையை தூக்கிக் கொண்டாடினார். இத்தனை ஆண்டு காலம் தேசத்திற்காக வென்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்த உலகக்கோப்பையை வேறு ஆடையிலா பெறுவது? அப்படியே பெற்றிருந்தாலும், பின்னராவது அதனை கழட்டிவிட்டு, உலகக்கோப்பையுடன் போஸ் கொடுத்திருக்கலாமே என ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் அர்ஜெண்டினா ஜெயித்ததா? அல்லது கத்தார் ஜெயித்ததா என கேள்விகள் எழுகின்றன.

புகைப்படங்களே இல்லை
உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி இருந்த பெரும்பாலான புகைப்படங்களில் கருப்பு அங்கியுடன் தான் இருக்கிறார். அணியின் புகைப்படங்களிலும் இப்படி தான் உள்ளது. எனவே மெஸ்ஸி தனது தேசத்திற்கு துரோகம் செய்யும் வகையில் செயல்பட்டார் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர். இதற்கு மெஸ்ஸி தரப்பில் இருந்து விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

