உலகக் கோப்பைப் போட்டியின்போது கலாட்டா விளைவிப்பதற்காக வந்ததாக சந்தேகப்படும் 10 அர்ஜென்டினா ரசிகர்களை தென் ஆப்பிரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர்.
கால்பந்துப் போட்டிகளில் கலாட்டாக்கள் படு சாதாரணம். எனவே உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் போது மிக பலத்த பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். குறிப்பாக, கலாட்டாவில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்காகவே தனிப்படைகள் அமைக்கப்படும்.
இந்தநிலையில், நேற்று 10 அர்ஜென்டினா ரசிகர்களை போலீஸார் தென் ஆப்பிரிக்காவில் கைது செய்துள்ளனர். இவர்கள் கலாட்டா விளைவிப்பதற்காக வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அரசு கொடுத்த தகவல்களின் அடிப்படையில்இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலாட்டா விளைவிக்கக் கூடியவர்கள் என்று கூறி சமீபத்தில் ஒரு பட்டியலை அர்ஜென்டினா அரசு தென் ஆப்பிரிக்க அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது நினைவிருக்கலாம். அதை கையில் வைத்துக்கொண்டு வேட்டையை தொடங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க போலீஸ்.