பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டியகோ மாரடோனா திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கால்பந்துப் போட்டி வரை மாரடோனாவே பயிற்சியாளராக நீடிப்பார் என செய்தி வெளியான சில நாட்களுக்குள் அவரை தடாலடியாக தூக்கியுள்ளது அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு வீரராக அர்ஜென்டினா அணிக்கு பெரும் பலமாக இருந்தவர் மாரடோனா. அந்த அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர் அவர். ஆனால் பயிற்சியாளராக அவர் சோடை போகவில்லை.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் மாரடோனா. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதி வரை மட்டுமே அர்ஜென்டினா முன்னேறியது. காலிறுதிப் போட்டியிலும் கேவலமாக தோற்று வெளியேறியது.
இதனால் மாரடோனா பயிற்சியாளராக நீடிப்பாரா என்றகேள்வி எழுந்தது. ஆனால் 2014ல் பிரேசிலில் நடைபெறும் போட்டி வரை அவரே நீடிப்பார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக மாரடோனாவிடமும் பேசியது அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம். ஆனால் தனது குழுவில் உள்ள அனைவருக்கும் நீட்டிப்பு தந்தால் மட்டுமே தான் மீண்டும் பயிற்சியாளராக நீடிக்க விரும்புவதாக மாரடோனா கூறினார்.
ஆனால் அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஜூலியோ கிரான்டோனா ஏற்கவில்லை. அவருடைய பல உதவியாளர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக மாரடோனாவுக்கு மிக நெருக்கமானவரான அலெஜான்ட்ரோ மன்குசோ கட்டாயம் போயாக வேண்டும் எனவும் அவர் பிடிவாதமாக இருந்தார். ஆனால் இதை மாரடோனா ஏற்கவில்லை. இதையடுத்து அவரை நீக்கி விட்டது அர்ஜென்டினாகால்பந்து சங்கம்.
இதுகுறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினரான லூயிஸ் செகுரா கூறுகையில், தனது வாய்ப்பை தானே தட்டி விட்டு விட்டார் மாரடோனா. அவருக்கு விருப்பமானதை செய்ய அவருக்கு உரிமை உள்ளது போல தனக்கு விருப்பமானதை செய்யும் விருப்பம் அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்திற்கு உண்டு என்றார்.
இதுகுறித்து கால்பந்து சங்க செய்தித் தொடர்பாளர் எர்னஸ்டோ செர்கிஸ் பியாலோ கூறுகையில், இது மிகவும் வலி நிறைந்த முடிவு. ஆனால் பிரச்சினையைத் தீர்க்க இது ஒன்றுதான் வழியாக உள்ளது. எனவே இதை தேர்வு செய்தோம்.
மாரடோனாவை தொடர்ந்து வைத்துக்கொள்வது தொடர்பாக தீவிரமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் தலைவர் இந்த முடிவை எடுத்தார். தலைவருக்கும், மாரடோனாவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு மிகப் பெரிதாகி விட்டது. அதை சுருக்க வாய்ப்பே இல்லை என்றார்.
இருப்பினும் எதிர்காலத்தில் மாரடோனாவுக்கு வேறு வாய்ப்புகள்தரப்படக் கூடும் என பியாலோ தெரிவித்துள்ளார். கதவுகளை ஒரேடியடியாக நாங்கள் மூடி விடவில்லை. எப்போதும் மாரடோனாவுக்காக எங்களது கதவுகள் திறந்தே இருக்கும். அவரது சரித்திரத்தின் ஒரு அத்தியாயம்தான் முடிந்துள்ளது என்றார்.
அர்ஜென்டினா அணியின் தற்காலிக பயிற்சியாளராக இளைஞர் அணியின் மேனேஜராக இருக்கும் செர்ஜியோ பாடிஸ்டா நியமிக்கப்பட்டுள்ளார். இவரே அயர்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள காட்சிப் போட்டிக்கு பயிற்சியாளராக செயல்படுவார்.
மேலும் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ள உலக சாம்பியன் ஸ்பெயின் அணிக்கு எதிரான காட்சிப் போட்டிக்கும் பயிற்சியாளராக நீடிப்பார்.
அர்ஜென்டினா அணியின் புதிய பயிற்சியாளராகும் வாய்ப்பு அலெஜான்ட்ரோ சபெல்லா, மிகுவல் ருஸ்ஸோ ஆகியோரில் ஒருவருக்கு உள்ளதாக கருதப்படுகிறது.
மாரடோனாவின் நீக்கத்திற்கு மேலும் சில காரணங்களும் கூறப்படுகின்றன. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரராக அறியப்பட்டவர் லியோனல் மெஸ்ஸி. இவர் மாரடோனாவின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். இவரைத்தான் தனது சிஷ்யராக அறிவித்து தலையில்தூக்கி வைத்துக் கொண்டாடினார் மாரடோனா. ஆனால் தென்ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் கூட போடவில்லை.
ஏன் அவரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு மாரடோனாவிடமிருந்து இதுவரை சரியான பதில் இல்லை.
இத்தனைக்கும் மெஸ்ஸியின் கால்களைக் கட்டிப் போடாமல் படு சுதந்திரமாக விளையாட அனுமதித்திருந்தார் மாரடோனா. அதேசமயம், மற்ற வீரர்களுக்கு அவர் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை போட்டு வைத்திருந்தார். ஆனால் அவர்கள்தான் அணிக்காக ஸ்கோர் செய்தார்களே தவிர, சுதந்திரமாக விளையாடி வந்த மெஸ்ஸியால் ஒரு கோல் கூட போட முடியாமல் போனது. இதுவும் மாரடோனா மீதான அதிருப்திக்கு ஒருகாரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாரடோனா பதிலளிக்கையில், நான் எப்படி விளையாட வேண்டும், எந்த பொசிசனில் ஆட வேண்டும் என்பதை எனக்கு யாரும் சொல்லியதில்லை. அதுபோலவே நானும் மெஸ்ஸிக்கு இப்படி விளையாட வேண்டும் என சொல்லவில்லை என்று கூறியிருந்தார் மாரடோனா.
மாரடோனாவின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. சாதாரண குடிசைப் பகுதியில் பிறந்தவர் மாரடோனா. வசதி என்றால் என்ன என்றே தெரியாமல் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர். அடித்தட்டு வாழ்க்கையின் ஆழத்தை அறிந்தவரான மாரடோனா சிறு வயதிலேயே கால்பந்து மோகம் கொண்டு அதை வேகமாக கற்றுத் தேர்ந்தவர்.
யாரையும் குருவாக வரிக்காமல், சுயம்பாக இவரே அனைத்தையும் கற்றுத் தேர்ந்து இளம் வயதிலேயே தனது திறமையை வெளிக்காட்டி அசர வைத்தவர். இவரது நேர்த்தியான ஆட்டத் திறமை, கோல் மட்டுமே இலக்காக கொண்ட வெறித்தனம் ஆகியவற்றால் அர்ஜென்டினா அணிக்குள் புயலாக நுழைந்தவர். நுழைந்த வேகத்தில் உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்து உலகப் புகழ் பெற்றவர்.
வீரராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மதுவுக்கும், போதைப் பொருளுக்கும் அடிமையாகி புகழை இழந்தார் மாரடோனா. இந்த நிலையில்தான் அவருக்குப் புது வாழ்வாக பயிற்சியாளர் பதவி வந்து அமைந்தது. அனுபவமே இல்லாத மாரடோனாவுக்கு பயிற்சியாளர் பதவியா என அப்போதும் சர்ச்சை எழுந்தது. ஆனால் அனைவரது வாயையயும் அடைத்தார் மாரடோனா.
தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பைப் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் அர்ஜென்டினா விளையாடிய விதம், மாரடோனா மீதிருந்த அதிருப்தியைப் போக்க உதவியது.
ஆனால் காலிறுதியில் ஜெர்மனியிடம் 0-4 என்ற கோல் கணக்கில் பெற்ற படுதோல்வி மாரடோனாவை ஒரேயடியாக வீழ்த்தி விட்டது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]