மும்பை : ஜோதிடர் அளிக்கும் அறிவுரைப்படி தான் இந்திய கால்பந்து அணிக்கு வீரர்களை பயிற்சியாளர் தேர்வு செய்கிறார் என்று புதிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. இந்திய கால்பந்து சம்மேளனன் பூபேஷ் சர்மா என்ற ஜோதிடருக்கு 12 முதல் 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து பணியில் அமர்த்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி பயிற்சியாளர் இகார் ஸ்ரீமாக் ஜோதிடர் யாரெல்லாம் ஜாதகம் பார்த்து விளையாட வைக்கலாம் என்று சொல்கிறாரோ அவரை தான் அணியில் களம் இறக்கினார் என்ற ஒரு சர்ச்சை வெடித்து இருக்கிறது.

விளையாட்டு என்பதில் அதிர்ஷ்டம் கொஞ்சம் இருந்தாலும் திறமைக்கு தான் அனைவருமே மிக முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். இந்த நிலையில் சில சமயம் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என ஒரு மூடநம்பிக்கை இந்தியாவில் நிலவுகிறது. இந்த நிலையில் பூபேஷ் ஷர்மா என்ற ஜோதிடர் இந்திய வீரர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து குறிப்பிட்ட வீரர் அந்த நாளில் எப்படி விளையாடுவார் என்பதை கணித்து சொல்வாராம்.
அதை கேட்டு தான் அன்றைய போட்டிக்கான அணியை பயிற்சியாளர் தேர்வு செய்வாராம். எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கிறார்களோ அவர்களுடைய ஜாதகமும் ஜோதிடர் பூபேஸ் சர்மாவிடம் இடம்பெற்றிருக்கும். அவர் இன்றைய நாளில் இந்த வீரர் சரியாக விளையாடுவார், இவர் அதிக நம்பிக்கையுடன் விளையாட கூடாது, சராசரியான நாளாக தான் இவருக்கு அமையும் , இந்த நாளில் இந்த வீரர் விளையாடுவது ஏற்புடையது கிடையாது என்ற அறிவுரைகளை ஜாதகத்தை ஆராய்ந்து சொல்வாராம்.
இதை பார்த்து தான் பயிற்சியாளர் வீரர்களை தேர்வு செய்வாராம். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஜோதிடர் சொன்ன படி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய ஆட்டத்தில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். ஜோதிடர் கருத்தைக் கேட்டு இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் தற்போது கால்பந்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.