பீலேவின் மறைவு
இப்படிப்பட்ட புகழ்பெற்ற ஜாம்பவானான பீலே குடல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டிகள் அகற்றப்பட்டது. இதற்கான சிகிச்சைகளை பெற்று வந்த அவரின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் காலமானார். இதனால் கால்பந்து உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இன்று இறுதி சடங்கு
இந்நிலையில் பீலேவின் உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன. அவரின் உடல் பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த மைதானம் பீலேவின் வீட்டிற்கு மிக அருகில் இருப்பதாகும். இன்று காலை அவரின் உடல், சாண்டோஸில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படவுள்ளது. இதே ஊருக்காக தான் பீலே முதல்முறையாக அறிமுகமாகி பல்வேறு கோல்களை அடித்திருந்தார்.
அனுமதி கிடையாது
அஞ்சலி நிகழ்ச்சிகள் முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. உலகிலேயே மிகவும் உயரமான கல்லறை தோட்டம் இதுவாகும். இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.
பிரபலங்களின் வருகை
பீலேவுக்காக பிரேசில் நாட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. எனவே கால்பந்து நாயகனுக்கு பிரியா விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல கால்பந்து நட்சத்திரங்களும் ஃபீலேவின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.