கொல்கத்தா: கால்பந்து ஜாம்பவான் பீலே கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். 74 வயதான பீலே, திறந்த வேனில் நகர்வலமாக அழைத்து வந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிங் ஆப் புட்பால் என்று அழைக்கப்படும் பீலே, ஆயிரம் கோல்களுக்கு மேல் அடித்த சாதனையாளர் ஆவார். 38 வருடத்திற்குப் பிறகு இன்று அவர் கொல்கத்தாவுக்கு வந்தார்.
தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து போன பீலே, வேனில் எழுந்து நின்று கூட்டத்தினரைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கருப்பு நிற உடையில் வந்திருந்தார் பீலே. 3 முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம் பெற்றிருந்தவர் பீலே. 24 மணி நேர விமான பயணத்தால் சற்றும் களைப்படையாமல் வந்திருந்த பீலேவே உற்சாகப்படுத்தி விட்டனர் கொல்கத்தா ரசிகர்கள்.
பீலே கடைசியாக 1977ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த காட்சிப் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்திரு்நதார். அப்போது நியூயார்க் காஸ்மோஸ் என்ற அணியில் அவர் இடம் பெற்று கொல்கத்தாவின் மோகன் பகான் அணியுடன் மோதினார். அப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
3 நாள் பயணமாக கொல்கத்தா வந்துள்ளார் பீலே. நாளை என்எஸ்எச்எம் நாலேட்ஜ் கேம்பஸுக்குச் செல்லும் பீலே அங்கு மாணவர்களுடன் உரையாடுகிறார்., செய்தியாளர்களையும் சந்திக்கிறார். மாலையில் ஈடன் காரா்டன் மைதானம் செல்லும் அவர் அங்கு 1977ம் ஆண்டு நடந்த காட்சிப் போட்டி குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
பின்னர் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி, பீலேவைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது 1997ல் நடந்த போட்டியின்போது பங்கேற்ற மோகன் பகான் வீரர்கள் பீலேவைச் சந்தித்து பேசுகிறார்கள்.
இந்த சந்திப்பின்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரும் கலந்து கொள்கிறார். டென்னிஸ் புயல் ரபேல் நடால் வீடியோ கான்பரன்சிங் மூலம் இதில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதற்கு அடுத்த நாள் அதாவது செவ்வாய்க்கிழமையன்று, சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் கேரளா பிளாஸ்டர்ஸ் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியைக் கண்டு களிப்பார் பீலே.