ரஸ்டன்பர்க்: நியூசிலாந்து, ஸ்லோவேகியா இடையிலான ஆட்டம் யாரும் எதிர்பாராத வகையில் கடைசி விநாடிகளில் டிராவில் முடிந்தது. நியூசிலாந்து வீரர் வின்ஸ்டன் ரீட் போட்டி முடிய சில விநாடிகளே இருந்த நிலையில் அட்டகாசமான கோலைப் போட்டு ஸ்லோவேகியாவின் கனவைத் தவிடுபொடியாக்கி விட்டார்.1982ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் பங்கேற்றது நியூசிலாந்து. ஆனால் அப்போது ஆடிய மூன்று ஆட்டங்களிலும் மண்ணைக் கவ்விச் சென்றது.இந்த நிலையில் தற்போது 2வது முறையாக உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் நுழைந்துள்ளது. இந்த முறை கடந்த முறையைப் போல அல்லாமல், நிச்சயம் வெற்றியுடன் தொடங்குவோம் என நியூசிலாந்து பயிற்சியாளர் ரிக்கி ஹெர்பர்ட் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.தரவரிசையில் 34வது இடத்தில் உள்ள ஸ்லோவேகியாவை சந்தித்தது நியூசிலாந்து. போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஸ்லோவேகியாவுக்கு ஈடு கொடுத்து ஆடியது நியூசிலாந்து. முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதும் விழவில்லை.2வது பாதி ஆட்டம் தொடங்கியதும், 50வது நிமிடத்தில் ஸ்லோவேகியா வீரர் விட்டக் தனது அணிக்கான கோலை அடித்தார். இருப்பினும் நியூசிலாந்து வீரர்கள் தளராத மனதுடன் ஆடினர். முழு ஆட்ட நேரம் முடிந்த பின்னர் தொடர்ந்த ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் யாரும் எதிர்பாராத வகையில், நியூசிலாந்து வீரர் ரீட் அபாரமான கோலைப் போட்டு ஸ்லோவேகியர்களை அதிர்ச்சியுறச் செய்தார்.தோல்வியில் முடிந்திருக்க வேண்டிய போட்டியை ரீடின் மின்னல் வேக கோல் டிராவில் முடித்து விட்டது.28 ஆண்டுகளுக்குப் பின்னர் மோத வந்த நியூசிலாந்து ரசிகர்களை சற்றும் ஏமாற்றாமல் முதல் போட்டியை டிராவில் முடித்த விதம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.