பியூனோஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினாவில் கால்பந்து போட்டியின் போது சிவப்பு அட்டைக் கொடுத்த நடுவரை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார்.

இதனால் சம்பந்தப்பட்ட அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டையைக் காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்த வீரர் நடுவரைத் திட்டியபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர், தனது அறைக்குச் சென்ற அந்த வீரர், தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்தார்.
யாரும் எதிர்பார்க்காத வேளையில், மைதானத்தில் இருந்த நடுவரை நோக்கி அவர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் நடுவருக்கு தலை, கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் மைதானத்தில் இருந்த மற்றொரு வீரருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்த ரசிகர்களும், மற்ற வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காயம் அடைந்த நடுவரும், மற்றொரு வீரரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்ரி நடுவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொரு வீரருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய துப்பாக்கியால் சுட்ட வீரரைத் தேடி வருகின்றனர்.