ரியாத் : கால்பந்து உலகின் வரைபடத்தை மாற்றக்கூடிய அளவு தற்போது பலமான ஒரு தொடரை சவுதி அரேபியா நடத்தி வருகிறது. சவுதி அரேபியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுலா வருமானத்தை அதிகரிக்க முடியும் என அந்த நாட்டு அரசு நம்புகிறது.
இதன் ஒரு பகுதியாக உலகின் சிறந்த வீரர்களை சவுதி அரேபியா லீக அணிகள் போட்டி போட்டு வாங்கி வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள அல் நஸ்ர் அணி ஆயிரத்து 119 கோடி ரூபாய் ஆண்டுக்கு ரொனால்டோ வுக்கு சம்பளமாக வழங்குகிறது.

இதன் மூலம் உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக ரொனால்டோ விளங்குகிறார். இந்த நிலையில் அல் நஸ்ர் அணியை மேலும் பலப்படுத்துவதற்காக ரொனால்டோவின் நண்பரும் பிரபல மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வீரருமான ரபேல் வரானேவை தங்களது அணிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவருக்கு ஆண்டுக்கு 445 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க அல் நஸ்ர் அணி முடிவு எடுத்திருக்கிறது. ரொனால்டாகவும் ரபெல் வரானேவும் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரும் இணைந்து ரியல் மாட்ரிட் அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடி நான்குமுறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றிருக்கிறார்கள்.
இதேபோன்று ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்றவுடன் அங்கேயும் ரஃபேல் வரானே விளையாடி இருக்கிறார். ஏற்கனவே பிரபல கால்பந்து வீரர்கள் சாடியோ மானே மற்றும் அய்மெரிக் லபோர்ட் போன்ற வீரர்களை அல் நஸ்ர் அணி வாங்கியிருக்கிறது.
இப்படி உலகின் சிறந்த வீரர்கள் எல்லாம் சவுதி அரேபியாவை நோக்கி செல்வதால் மற்ற நாட்டு கால்பந்து லீக அணிகள் கலக்கமடைந்து இருக்கிறார்கள். ஏற்கனவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் கால்பந்து வீரர்களுக்கு சவுதி அரேபியா கால்பந்து புதிய ஒரு உச்சத்தை கொடுத்திருக்கிறது.