காஷ்மீர் : நீண்ட நாட்களுக்குப் பின் காஷ்மீரில் ஒரு பெரிய விளையாட்டுப் போட்டி நடந்துள்ளது.
ஆம், ஐ-லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டி ஒன்று காஷ்மீரில் நடந்தது. சென்னை சிட்டி எஃப்சி அணிக்கு எதிராக ரியல் காஷ்மீர் அணி மோதியது.
இந்தப் போட்டியில் ரியல் காஷ்மீர் அணி வெற்றியும் பெற்றது இந்தப் போட்டியை மேலும் சிறப்பானதாக மாற்றியது. யூனியன் பிரதேசமாக காஷ்மீர் மாறிய பின் நடக்கும் முதல் பெரிய விளையாட்டுப் போட்டி இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகரின் டி.ஆர்.சி டர்ஃப் மைதானத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 26) நடப்பு சாம்பியனான சென்னை சிட்டி எஃப்சிக்கு எதிராக மோதியது ரியல் காஷ்மீர். இந்தப் போட்டியில் ரியல் காஷ்மீர் அணியின் டானிஷ் பரூக் 22வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் அதே அணியின் பாஸி அர்மான்ட் ஒரு கோல் அடித்தார். ரியல் காஷ்மீர் அணி 2 கோல் அடித்து அசத்தலாக முன்னிலை பெற்றது. சென்னை அணியின் சையது சுஹைல் 48வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் ரியல் காஷ்மீர் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இது 2019 - 20 சீசனில் ரியல் காஷ்மீர் அணி பெறும் முதல் வெற்றி ஆகும். இது களத்திலும், களத்திற்கு வெளியேயும் அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அரசியல் சூழ்நிலைகளால் சொந்த மண்ணில் கால்பந்து போட்டி நடத்த முடியுமா? என்ற குழப்பத்தில் இருந்த அந்த அணிக்கு இந்தப் போட்டி ஆறுதலாக அமைந்தது.
பாதுகாப்பு காரணங்களால் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், இந்தப் போட்டிக்கு ரியல் காஷ்மீர் தேவையான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தது. போட்டி எந்த சிக்கலும் இன்றி நடந்தது.
இந்தப் போட்டி நேரலையில் ஒளிபரப்பாகவில்லை. ஐ-லீக் தொடரை வெளியிட்டு வரும் டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இது குறித்து ஒரு தகவல் அளித்து இருந்தது. காஷ்மீரில் இணையதள சேவை பிரச்சனைகள் இருப்பதால் இந்தப் போட்டி ஒளிபரப்பப்பட மாட்டாது. எனினும், பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஸ்ட்ரீமிங் மூலம் இந்தப் போட்டியை காணலாம் என முன்பே அறிவித்தது.