பிரிட்டோரியா: 10 வீரர்களுடன் ஆட நேரிட்ட செர்பியாவை தனது அபாரமான ஆட்டத்தால் 1 கோலடித்து வெற்றி கண்டது கானா.
இளம் வீரர் அசமோவா கியான் வெற்றிகான கோலைப் போட்டார். அவருக்கு நேற்று பிறந்த நாளும் கூட. தனது பிறந்த நாளை கானாவுக்கான நாளாக மாற்றி விட்டதால் கானா மக்கள் கியானின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கடுமையாக மோதினர். இதன் காரணமாக செர்பிய வீரர் அலெக்சாண்டர் லுகோவிக்குக்கு 2 முறை மஞ்சள் கார்டு காட்டப்பட்டு, கடைசியாக ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் ஆடியது செர்பியா.
ஆட்டம் விறுவிறுப்பாக இருந்ததால், முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமலேயே முடிந்தது. இரண்டாவது பாதி ஆட்டமும் கூட அதே போலத்தான் தொடர்ந்தது. ஆட்டம் முடிய ஐந்து நிமிடமே இருந்த நிலையில் செர்பிய வீரர் டிராவ்கோ குஸ்மனோவ் தேவையில்லாமல் பந்தை கையால் தொட்டு விட்டார்.
இதையடுத்து கானாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பந்தை அடிக்கும் பொறுப்பு கியானிடம் விடப்பட்டது. அவரும் படு சாதுரியமாக பந்தை அடிக்க செர்பிய கோல்கீப்பர் அதைப் பிடிக்க முடியாமல் கோட்டை விட்டார், கோல் ஆனது.
ஆட்டம் முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில், டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராமல் கிடைத்த இந்த கோலால் கானா அணி அபார வெற்றி பெற்று விட்டது.
இந்த ஆண்டு தொடரில் முதல் வெற்றியைப் பெற்றுள்ள ஆப்பிரிக்க அணி கானா என்பதால் மைதானத்தில் கூடியிருந்த ஆப்பிரிக்க ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் எழுப்பிய கோஷம் விண்ணைத் தொட்டது.
கானா நாட்டிலும் உற்சாகம் கரைபுரண்டோடியது.
தங்களது தவறால் தேவையில்லாமல் டிராவைக் கோட்ட விட்ட அதிர்ச்சியில் செர்பிய வீரர்கள் உறைந்து போயிருந்தனர்.
இந்தப் போட்டி குறித்து செர்பியப் பயிற்சியாளர் ரடோமிர் ஆன்டிக் கூறுகையில், இனி நாக் அவுட் போட்டிகளுக்கு நாங்கள் தகுதி பெற கடுமையாக போராடி வேண்டி வரும் என்றார் சோகத்துடன்.
டி பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா அடுத்து வலுவான ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]