நாக்அவுட் துவக்கம்
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்கின. இதில் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், அர்ஜென்டினா சந்தித்தன. இதில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கில் வென்று முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்.
2014ல் எப்படி
இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் நிலைமை அதைவிட மோசம். அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என டிரா, குரேஷியாவிடம் 3-0 என தோல்வி அடைந்தது. கடைசியில் நைஜீரியாவை 2-1 என வென்றது.
பரபரப்பான ஆட்டம்
நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை நம்பி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா களமிறங்கியது. சமபலம் உள்ள அணிகள் என்பதால் ஆட்டம் துவக்கத்திலேயே சூடு பிடித்தது. 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்பை பயன்படுத்தி அன்டாய்ன் கிரிஸ்மான் கோலடிக்க 1-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. 41வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டிமரியா கோலடிக்க 1-1 என சமநிலை உருவானது. முதல் பாதியின் இறுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
காலிறுதி முன்னேறியது
இரு அணி மாறி மாறி கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கின. 48வது நிமிடத்தில் மெஸ்ஸி கடத்தி தந்த பந்தை காப்ரியல் மெர்காடோ கோலாக்க 2-1 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 57வது நிமிடத்தில் பிரான்ஸின் பெஞ்சமின் பவார்ட் கோலடித்து 2-2 என சமப்படுத்தினார். அதன்பிறகு கிளியான் மாப்பே 64 மற்றும் 68வது நிமிடங்களில் கோலடிக்க 4-2 என பிரான்ஸ் முன்னேறியது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஆகுரோ கோலடிக்க 4-3 என முன்னிலையை குறைத்தார். இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.