சவுதி அரேபியா லீக்கில் அல்- எடிஃபக் அணிக்காக ஆடி வந்த ஜோர்டன் ஹெண்டர்சன், அஜாக்ஸ் அணியில் இணைந்து விளையாடிய முதல் போட்டியை பார்க்க இங்கிலாந்து மேனேஜர் சவுத்கேட் நேரில் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2010ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாடி வருபவர் ஜோர்டன் ஹெண்டர்சன். இதுவரை 81 போட்டிகளில் விளையாடியுள்ள ஹெண்டர்சன், பல ஆண்டுகளால லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்தார். திடீரென கடந்த ஆண்டு சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-எடிஃபக் அணியில் இணைந்தார். இது இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சவுத்கேட், ஹெண்டர்சனுக்கு தனது ஆதரவை அளித்தார். இங்கிலாந்து அணிக்காகவும் அவரை தொடர்ந்து தேர்வு செய்தார். இந்த நிலையில் அல்-எடிஃபக் அணியுடனான ஒப்பந்தத்தை 6 மாதத்தில் முறித்த ஹெண்டர்சன், ஜனவரி மாதம் 3வது வாரத்தில் அஜாக்ஸ் அணியுடன் இணைந்தார்.
டச் லீக் தொடரில் அஜாக்ஸ் அணி விளையாடி வந்த சூழலில், நேற்றைய ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து பிஎஸ்வி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதல்முறையாக அனுபவ வீரர் ஜோர்டன் ஹெண்டர்சன் அஜாக்ஸ் அணிக்காக அறிமுகமானார்.
இந்த நிலையில் அஜாக்ஸ் - பிஎஸ்வி இடையிலான போட்டியில் நேரில் பார்க்க இங்கிலாந்து அணியின் மேனேஜர் சவுத்கேட் நேரில் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஹெண்டர்சன் பேசுகையில், இங்கிலாந்து மேனேஜர் சவுத்கேட் சரியான போட்டியை பார்க்க தேர்வு செய்து, நிச்சயம் மகிழ்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்த மைதானத்தில், இந்த சூழலில் விளையாடுவது ஸ்பெஷலான தருணம்.
இந்த லீக்கில் எங்களின் அணி இன்னும் முன்னேற்றமடைய வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. ஆனால் இப்போது அஜாக்ஸ் அணியுடன் இணைவது பெருமையாக உள்ளது. எங்களால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் புள்ளிகள் பெற்று அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். பிஎஸ்வி மிகச்சிறந்த அணியாகும். அவர்களை வீழ்த்துவதற்கு எங்கள் நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 2வது கோலை எங்களால் அடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.