மும்பை: கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ அல்லது மெஸ்ஸி இருவரில் யாரை மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பதில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக சர்ச்சைக்குரிய வீரராக கவுதம் கம்பீரை சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களால் பொளந்து கட்டப்பட்டு வருகிறார். அண்மையில் கூட முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தை "ஃபிக்சர்" என்று கூறியதற்காக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து கம்பீர் எந்த விளக்கத்தையும் அளிக்க முன்வரவில்லை.

இதனிடையே பிகில் படத்தின் காமெடி ஒன்றை கவுதம் கம்பீர் செய்திருப்பது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டேனியல் பாலாஜியின் மகன், விஜயிடம் கால்பந்து பயிற்சி பெறுவதற்காக அழைக்கப்பட்டு வருவார். அப்போது விஜய், யாரை மாதிரி விளையாடனும்.. ரொனால்டோவா இல்லை மெஸ்ஸியா? என்று கேட்பார்.
அதற்கு அந்த குட்டி பையன், "பிகில்" என்று விஜயின் மற்றொரு பெயரை கூறுவார். தமிழ் சினிமாவில் அதிக கலாய்க்கப்பட்ட காட்சிகளில் அதுவும் ஒன்றாகும். ஜாம்பவான் வீரர்களுடன் ஜாலியாக தனது பெயரை இணைத்து எப்படி கூச்சமே இல்லாமல் அதுபோன்ற காட்சிகளை எடுத்தனர் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொளந்து கட்டினர். அதுகூட சினிமா என்பதால் கால்பந்து ரசிகர்கள் தரப்பில் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.
தற்போது நேர்காணல் ஒன்றில் ரொனால்டோ அல்லது மெஸ்ஸி இருவரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, கவுதம் கம்பீர் இருவரையும் தேர்வு செய்ய மாட்டேன். அவர்களுக்கு பதிலாக மார்கஸ் ராஷ்போர்டை தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் கால்பந்து ரசிகர்கள் பலரும் கவுதம் கம்பீரை பொளந்து கட்டி வருகின்றனர்.
கவுதம் கம்பீருக்கு பெரிதாக கால்பந்து தெரியவில்லை என்றால், தெரியாது என்று சொல்லிருக்கலாம். அதற்காக ஜாம்பவான் வீரர்களை இப்படி அசிங்கப்படுத்த கூடாது என்றும், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ரசிகர்கள் இணைக்கும் பணியை தான் கவுதம் கம்பீர் செய்து வருவதாகவும் கால்பந்து ரசிகர்கள் அவரின் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.