
மொராக்கோவின் பெருமை
குரோஷியா அணியுடனான தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து வாலிட் ரெக்ராகுய் கூறுகையில், உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற பெருமை எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த உலகக்கோப்பைத் தொடர்களில் எங்களின் பாய்ச்சல் அதிகமாக இருக்கும். நாங்கள் மொராக்கோ ரசிகர்களின் மனதிற்கு மகிழ்ச்சியளித்துள்ளோம் என்று நம்புகிறோம்.

கற்றல் அவசியம்
ஆனால் ஒரு அணியாக அடுத்தடுத்து இரு தோல்விகளை அடைந்தது மகிழ்ச்சியளிக்கவில்லை. உலகின் தலைசிறந்த 4 அணிகளில் நாங்களும் இருக்கிறோம். கடைசி நிமிடம் வரை வெற்றிக்கான எங்களின் போராட்டம் தொடர்ந்தது. குரோஷியா அணிக்கு எங்களின் வாழ்த்துகள். அவர்கள் மூன்றாவது இடத்திற்கு தகுதியானவர்கள். நாங்கள் இளம் அணி என்பதோடு, இன்னும் அதிகமாக கற்க வேண்டியுள்ளது.

அடுத்த உலகக்கோப்பை
தொடர்ச்சியாக டாப் அணிகளோடு 7 போட்டிகளில் மோதியது, உடல்ரீதியாக சோர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எங்கள் பலம் என்ன என்பதை அனைவருக்கும் நிரூபித்துள்ளோம். உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக ஆப்பிரிக்காவில் கால்பந்து விளையாட தயாராக இருக்கிறோம் என்று உரக்க ஒலித்துள்ளோம். அடுத்த உலகக்கோப்பையில் பங்கேற்கும் போது எங்கள் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கும். மக்கள் இன்னும் அதிகமாக எங்களிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள்.

15 ஆண்டுகள்
கத்தார் உலகக்கோப்பையில் மொராக்கோ அணி பெரிய சாதனை படைத்துள்ளது. ஆனால் அடுத்த முறையும் சாதனைகளை தொடர விரும்புகிறோம். அது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. இங்கே கற்ற அனைத்து பாடங்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம். மொராக்கோ அணியால் குழந்தைகள் கனவு காண தொடங்கியுள்ளார்கள். அதுதான் எங்களுக்கு விலை மதிக்க முடியாத சாதனை. நிச்சயமாக அடுத்த 15 ஆண்டுகளுக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications













