தோஹா: கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டி ஒன்றில் கத்தார் அணி வெளிப்படையாக இந்திய அணியை ஏமாற்றி கோல் அடித்தது. ரெஃப்ரீயும் அந்த கோலை ஏற்றுக் கொண்டார்.
எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கோல் அடித்து இருந்தனர் கத்தார் வீரர்கள். விதிப்படி இது தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டார். இந்த போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்றதால் அந்த அணிக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதை அடுத்த இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி 2026 கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்திய அணியை கத்தார் ஏமாற்றியது உலக அளவில் கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. என்ன நடந்தது?

2026 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள ஆசிய அணிகளை தேர்வு செய்ய ஆசிய அணிகளுக்கான இரண்டாம் கட்ட தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருந்த இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதின. கத்தார் நாட்டில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. குறைந்தபட்சம் டிரா செய்தால் கூட வாய்ப்பை தக்க வைக்கலாம் என்ற நிலை இருந்தது.
இந்த சூழலில், போட்டியின் 37வது நிமிடத்தில் லல்லியன்சுவாலா சாங்டே ஒரு கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் 72வது நிமிடம் வரை இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது போட்டி. 73வது நிமிடத்தில் இந்திய அணியின் கோல் கீப்பர் குருப்ரீத் சிங் வசம் வந்த பந்தை அவர் எல்லைக் கோட்டுக்கு வெளியே தள்ளி விட்டார். பந்து வெளியே போய் விட்டால் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் தங்கள் ஆட்டத்தை நிறுத்தினர்.
அதே சமயம், வெளியே போன பந்தை உள்ளே தள்ளி விட்டார் கத்தார் அணியின் அல் ஹசன். அதை அய்மென் கோல் அடித்தார். தென்கொரிய மேட்ச் ரெஃப்ரீ இதை கோல் என அறிவித்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இந்திய வீரர்கள் பந்து வெளியே சென்றதை அவரிடம் கூறினார்கள். இந்தப் போட்டியில் கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் முறையான VAR இல்லாததால் மேட்ச் ரெஃப்ரீ, லைன் மேனிடம் இது குறித்து கேட்டார்.
கத்தார் நாட்டில் நடைபெறும் போட்டி என்பதால் லைன் மேன் கத்தார் அணிக்கு சாதகமாக பந்து வெளியே வரவில்லை என பச்சை பொய் ஒன்றை கூறினார். இதை அடுத்து கத்தார் அணிக்கு ஒரு கோல் அளிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி காரணமாக 85 நிமிடத்தில் மேலும் ஒரு கோலை விட்டுக் கொடுத்தது இந்திய அணி. இதை அடுத்து 2 - 1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி, இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய அணியின் 2026 கால்பந்து உலகக்கோப்பை கனவும் பறிபோனது.