கோவா : கோவா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்ற நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவா அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வென்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 17 ஆவது போட்டி கோவா ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும், மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற கோவா அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கத்தில் இருதே கோவா அணி கெத்து காட்டி விளையாடியது. ஆனால் ஆட்டத்தின் 4 ஆவது நிமிடத்தில் மும்பை அணிக்கு கோல் அடிக்க அருமையான சான்ஸ் கிடைத்தது. ஆனால் அது கைநழுவிப் போனது.
5 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சௌபிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோது 7 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து இரு அணிகளும் மிகக் கடுமையாக விளையாடின. இந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு பல முறை வாய்ப்பு கிடைத்தும் கோல் அடிக்க முடியவில்லை. 43 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் முர்டுடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. ஆனால் முதல் பாதி ஆட்டம் முடியும் வரை மும்பை அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 55 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜாக்கி சந்த் ஒரு கோல் அடித்து அசத்தினார். கடுமையான இந்த சூழ்நிலையில் முப்பை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
என்னதான் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அடுத்து 61 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியா அற்புதமாக ஒருகோல் அடித்து அசத்தினார்.
74 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் முகம்மதுவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. அடுத்தடுத்து கோவா அணி மூன்று கோல்கள் போட்ட நிலையில் மும்பை அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆனாலும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
இதையடுத்து 84 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மிகுல் ஒரு கோல் அடித்து எண்ணிக்கையை நான்காக உயர்த்தினார். அடுத்து 90 ஆவது நிமிடத்தில் மிகுல் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இறுதியில் 5 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.