கொல்கத்தா : ஏடிகே மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே அணி 2 - 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 19 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரெங்கா ஸ்டேடியத்தில் ஏடிகே அணிக்கும் சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 மணிக்கு தொடங்கியது.
சென்னையின் எஃப்சி அணி டாஸ் வென்று இடது புறமிருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 3 ஆவது நிமிடத்திலேயே ஏடிகே அணியின் காலு உச்சே அற்புதமாக ஒரு கோல் அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஏடிகே அணி முதல் கோல் அடித்த அதிர்ச்சியில் இருந்து சென்னை அணி மீள்வதற்குள் ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜான் ஜான்சன் அந்த அணிக்காக அடுத்து ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து சென்னை அணி வீரர்கள் தங்கள் ஆட்டத்தின் போக்கை வேகப்படுத்தினர். அப்போது சென்னை அணியின் கார்லஸ் சலோம் ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
27 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் புரோனேக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது.
34 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணி முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்டத்தின் இரண்டாவது பகுதி விறுவிறுப்பாக தொடங்கியது. இரு அணி வீரர்களும் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஆடினர். ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பல்வந்த் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அரிந்தம் பட்டாச்சாரியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மற்றும் ஏடிகே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 83 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் மானுவலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆட்டத்தை சமன் செய்ய சென்னை அணி எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இறுதியில் ஏடிகே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.