கொல்கத்தா : கொல்கத்தாவில் நவம்பர் 10 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி ஏடிகே அணி அபாரமாக வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 33 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் ஸ்டேடியத்தில் ஏடிகே அணிக்கும் புனே சிட்டி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக விளையாடின. இரு அணிகளுமே கோல் அடிக்க முயன்றன. ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியின் ஆஷிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மற்றுமொரு வீரர் ஜோனத்தானுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரு அணிகளுமே பல முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது நழுவிப்போனது. இதையடுத்து 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த நிமிடங்களில் கூட இரு அணிகளும் கோல் போடவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஆல்வின் ஜார்ஜ் வெளியேற்றப்பட்டு அபிஷேக் களம் இறங்கினார்.
ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஷாகில் பன்வாருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏடிகே அணியின் இரண்டு வீரர்கள் மாற்றப்பட்டனர். இதையடுத்து புனே அணியின் மார்டினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அடுத்து ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜெர்சன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நிமிடங்களிலும் இரு அணிகளும் போல் எதுவும் போடவில்லை. இதனைத் தொடர்ந்து போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி ஏடிகே அணி அபாரமாக வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)