பெங்களூரு : ஐஎஸ்எல் நடப்பு சீசனில் யாராலும் வெல்ல முடியாத, சிறந்த அணி என்பதை பெங்களூரு அணி நிரூபித்துள்ளது. இதே போல் மும்பை அணியும் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கோவா அணியிடம் மும்பை அணி தோல்வியுற்றாலும், அவர்களது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி அவற்றில் 5 -ல் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு அணி, காண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த சீசனில் யாராலும் வெல்ல முடியாத அந்த அணியுடன் போட்டியிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த அணியுடனான விளையாட்டில் மும்பை அணி தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்றால் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லெஸ் குவாட்ராட், நாங்கள் இரண்டு முறை மும்பை அணிக்கு எதிராக விளையாட வேண்டும். அந்த அணியுடன் பலமுறை விளையாடி இருந்தாலும், மும்பைக்கு எதிரான போட்டி, ஒரு சவால் மிகுந்தது என்கிறார்.
வெனிசுலா வீரர் மிக்கு இல்லாத நிலையில், பெங்களூரு அணி இலகுவாக கோல் அடிப்பதற்கு போராட வேண்டி இருந்தாலும் சுனில் சேத்ரி மற்றும் உதாந்தா சிங் ஆகியோர் அணியில் இருப்பதால் பெங்களூரு அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்கிறார் குவாட்ரெட்.
பூடான் வீரர் சென்சோ கியெல்ட்சென் நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி டிரா செய்தார். அவரது பங்கும் பெங்களூரு அணிக்கு சிறப்பு சேர்க்கும். 75 ஆவது நிமிடத்துக்குப் பிறகு பெங்களூரு அணிக்காக அவர் 6 கோல்கள் அடித்தார்.
இதனிடையே இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா, போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். பெங்களூரு அணியிடம் பலவீனமான பாயிண்ட்டுகள் என்று எதுவும் இல்லை. மொத்தமாகவும், தனித் தனியாகவும் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். மூன்று புள்ளிகளைப் பெற்று வெற்றியுடன் மும்பை திரும்ப வேண்டும் என கோஸ்டா கூறுகிறார்.
கடந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜோய்னெர் லாரென்கோ தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது மும்பை சிட்டி அணிக்கு ஒரு எழுச்சியைத் தந்திருக்கிறது. அதனால்தான் கடந்த 6 போட்டிகளில் 5 ஆட்டத்தை மும்பை அணியால் வெல்ல முடிந்தது.
கடந்த சீசனில் பெங்களூரு அணியில் இருந்த சுபாஷிஷ் போஸும் தற்போது மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது விளையாட்டும் மும்பை அணிக்கு கூடுதல் பலம்.
இந்தியாவின் மிகச் சிறந்த கோல் கீப்பர்களான குர்பிரித் சிங் சந்து மற்றும் அமிரிந்தர் சிங் ஆகியோர் இடையே நடக்கும் மிகக் கடுமையான போட்டி எப்படி இருக்கும்? என்பதைத் தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்,
(Photos Courtesy - ISL)