கொல்கத்தா : கொல்கத்தாவில் நாளை நடைபெறும் ஹுரோ ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது ஏடிகே அணி.
கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
கோப்பல் தலைமையிலான ஏடிகே அணி கேரள பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணிகளுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணிலேயே வீழ்ந்தது.
இதையடுத்து ஏடிகே அணி. டெல்லி டைனமோஸுக்கு எதிராக ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. பின்னர் கடந்த சீசனின் சாம்பியனான சென்னை அணியையும் வீழ்த்தி தங்களது மண்ணில் முதல் வெற்றியைப் பெற்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த கோப்பல், சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது சற்று கடினம்தான் என்றாலும், கடைசி ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். தற்போது மீண்டும் வெற்றியை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
எங்கள் அணியின் நட்சத்திர வீரரான காலு உச்சே சென்னைக்கு எதிராக ஆடிய ஆட்டம் எங்களது வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்திருந்தது என்கிறார் கோப்பல். இதே போல் ஜான்சன் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் ஏடிகே அணியின் வெற்றிக்கு உதவுவார்கள் என கோப்பல் தெரிவித்தார்.
இதே போல் பெங்களூரு அணியின் மிக்கு மற்றும் சுனில் ஆகியோர் வலிமை மிகுந்த வீரர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு பெங்களூரு அணி இரண்டாம் இடத்தைப் பிடிக்க இந்த இரட்டையர்கள் தான் கோல் அடித்தார்கள் என்கிறார் அதன் புதிய பயிற்சியாளர் கார்லெஸ் குவாட்ரட்.
இந்த சீசன் லீக் போட்டியில் மிக்குவும், சுனிலும் இதுவரை 6 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளனர். இது பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவும். கடந்த சீசனில் அதிக கோல் அடித்த இரட்டையர்கள் இந்த சீசனிலும் வெற்றிக் கொடி நாட்டுவார்கள் என்கிறார் கார்லெஸ் குவாட்ரட்.
மேலும் அவர்கள் அதிக கோல் அடிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளனர். பெங்களூரு அணி தங்கள் சொந்த மண்ணில் பலத்துடன் இருந்தாலும் வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளிலும் அவர்கள் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். கடந்த ஆண்டில் ஒன்பது போட்டிகளில் விளையாடி அதில் ஏழு வெற்றிகளை பெங்களூரு அணி பெற்றுள்ளது.
ஏடிகே அணிக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் பெங்களுரு அணி, தங்களது கோட்டையை தக்க வைத்துக் கொள்ளும் என்கிறார் கார்லெஸ் குவாட்ரட்.