சென்னை : சென்னையில் டிசம்பர் 2 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 3 - 2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஏடிகே அணி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 46 ஆவது கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கும், ஏடிகே அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஏடிகே அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின. ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜெயேஷ் ரானே அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் தாய்சிங் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி அதை நழுவவிட்டது.

ஆனால் 44 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த அணியின் மனுவல் லான்சரோட் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை என்பதால் ஏடிகே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 79 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கார்லஸ் மற்றும் லால்தின் ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது மனுவல் லான்சரோட் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இது ஏடிகே அணியின் மூன்றாவது கோல் ஆகும். சென்னை அணி பெரிய பின்னடைவில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தது.

பின்னர் ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஐசக் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த 4 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதையடுத்து 3 - 2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஏடிகே அணி அபார வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)