சென்னை : சென்னையில் டிசம்பர் 15 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சூப்பர் வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 58 ஆவது கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எஃசி அணிக்கும் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி டைனமோஸ் எஃப்சி அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
தொடக்கம் முதலே இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் மார்ட்டிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் டேனியல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ரெனிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் 39 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது சென்னை அணியின் ரஃபேல் அகஸ்டோ அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார்.
45 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் மொகமதுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 2 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் டென்டன்பா சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 78 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் பிக்ராம்ஜித் சிங் அற்புதமாக கோல் அடித்தார்.
இந்த கோல் அடித்த சிறிது நேரத்திலேயே அதாவது 82 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் நந்தகுமார் சேகர் ஒரு கோல் அடித்து அணியில் கோல் எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தினார்.
பின்னர் ஆட்டத்தில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் டெல்லி டைனமோஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)