சென்னை : சென்னை மற்றும் கேரளா அணிகள் இடையே நவம்பர் 29 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்ததது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 43 ஆவது கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கும், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டத்தின் போது இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின. சென்னை அணி வீரர்கள் நிதானமாகவும் அதே நேரத்தில் பொறுப்புடனும் ஆடத் தொடங்கினர்.
ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு கோல் அடிக்க அற்புதமான ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தாய்சிங் அந்த வாய்ப்பை தேவையில்லாமல் வீணாக்கினார். இது சென்னை ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்திலும் கோல் அடிக்காததால் முதல் பாதி ஆட்டத்தில் 0 - 0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியிலும் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இரண்டாவது பாதியில் கேரளா அணிக்கு மூன்று முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த அணி வீரர்கள் அதை நழுவவிட்டனர். இதையடுத்து ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த ஐந்து நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து சென்னை மற்றும் கேரள அணிகளுக்கிடையே ஆன கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
(Photos Courtesy - ISL)