மும்பை : டிசம்பர் 5 மும்பை அரினா அரங்கில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் போட்டியில் சென்னை அணியை தோற்கடித்து வெற்றியைத் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார் மும்பை அணி பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இந்த சீசனில் மும்பை சிட்டி அணி நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஆனால் இது போதாது என்றும் இன்னும் அதிகம் உழைத்து நன்கு விளையாட வேண்டும் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.
அந்த அணி 5 போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியிடம் மும்பை தோற்கவில்லை எனில் ஐஎஸ்எல் சரித்திரத்தில் அது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படும்.
இது குறித்து கருத்து தெரிவித்த மும்பை அணியின் பயிற்சியாளர் கோஸ்டா, கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது இந்த முறை எங்கள் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சீசனின் தொடக்கத்தில் அதை நாங்கள் செய்யவில்லை, அதற்கு சிறிது காலம் பிடித்தது. தற்போது மூன்று கோல்கள் அடிப்பதற்கு பெரிய அளவில் கஷ்டப்படத் தேவையில்லை என்னும் நிலைக்கு எங்கள் அணி வந்துள்ளது என்கிறார்.
மிட் பீஃல்டு ஏரியாவை பாலோ மச்சோ பார்த்துக் கொள்கிறார். அர்னால்ட் ஐசோகோ வலது புறமாக விளையாடுவது எதிர் தரப்பினருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். நாளை நடைபெறவுள்ள போட்டியில் சென்னை அணியை ஜெயிப்பதற்கு மோடு சோக்கோவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் மும்பை அணியின் புள்ளிகளை 19 ஆக உயர்த்துவதற்கும் அவரால் முடியும் என்கிறார் கோஸ்டா.
இதே போல் சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரியும் தங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார். மும்பை அணி குறித்து பேசிய அவர் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அர்னால்டு மிகச் சிறந்த வீரர். இதே போல் மேட்ரியாசும் நல்ல வீரர்தான் ஆனால் அவர் அடிக்கடி காயம் அடைந்து விடுகிறார். மேலும் கேப்டன் லூசியன் ஜோயனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் மும்பை அணியின் வலிமை அவர்களின் குழுவில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர்களிடம் எந்த பலவீனமான பகுதிகளும் இல்லை என்று கூறிய கிரிகோரி மும்பை அணி நன்கு சமநிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை அணி தொடக்கத்தில் இருந்தே திறமையாக விளையாவில்லை. பத்து ஆட்டங்களில் 5 புள்ளிகளை மட்டுமே அந்த அணி பெற்றது. அடுத்து வரும் ஆட்டங்களில் ஒரு அற்புதம் நடந்தால் மட்டுமே பட்டியலில் நான்கு இடத்துக்குள் சென்னை அணி வர முடியும்.
அடுத்து உள்ள 8 ஆட்டங்களில் ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிறார் கிரிகோரி. கால்பந்தைப் பொறுத்தவரை முடியாதது என்று ஒன்றும் இல்லை. எங்கள் அணிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்றும் பல புள்ளிகளை நாங்கள் பெற வேண்டும் அதற்கான முயற்சியில் நாங்கள் இருக்கிறோம்.
மெரீனா மச்சான்களைப் பொறுத்தவரை எதையுமே சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை. இந்த போட்டியில் ஒன்று அல்லது இரண்டு கோல்களை கண்டிப்பாக அடிப்பார்கள். மேலும், அவர்கள் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
சென்னை அணியின் ஜீஜி லாபெக்லோ இந்த சீசனில் சோபிக்கவில்லை. இது வரை அவர் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. இதே போல் ஜெர்ரி லால்சுத்சிலாவும் நன்கு ஆடவில்லை. மிகவும் அனுபவமுள்ள மொகமது ரஃபி இந்த முறை சிறப்பாக விளையாடுவார் என தான் நம்புவதாக கிரிகோரி தெரிவித்தார்.
(Photos Courtesy - ISL)