புனே: ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் கடந்த சீசனில் ஈஸியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னையின் எஃப்சி அணி இறுதிப் போட்டியில் புனே அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே அணி தற்போது அட்டவணையில் கடைசியாக இருப்பதை ரசிகர்களால் ஜீரணிக்கு முடியவில்லை.
ஆனால் காலம் தற்போது மாறிவிட்டது. தற்போது புனேவில் உள்ள ஷிவ் சத்ரபதி சிவாஜி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோத உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த புனே அணியின் துணை பயிற்சியாளர் பிரதியு ரெட்டி கடந்த சீசனில் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்த இரு அணிகளும் தற்போது ஒரு மோசமான சூழ்நிலையை சந்திக்கின்றன என்பதை யாராலும் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எனவே எங்களை நாங்களே சுயபரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆட உள்ளதாக தெரிவித்தார்.
போர்ச்சுக்கல் பயிற்சியாளர் முகுல் ஏஞ்சலிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட ரெட்டி, புனே அணியை மீண்டும் நல்ல ஃபார்முக்கு கொண்டுவர பெரு முயற்சி செய்து வருகிறார். இவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் ஆட்டத்தில் கோவா எஃப்சி அணியுடன் விளையாடி 2 - 4 என்ற கோல் கணக்கில் தோற்றது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் கேரளா அணியுடன் மோதும்போது டிராவில் முடிந்தது. இது அந்த அணிக்கு சற்று ஆறுதலைத் தந்தது.
கோவாவுக்கு எதிரான போட்டியில் பிரேசில் வீரர் டியாகோ கார்லோசுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால் அவர் இரண்டு போட்டிகளில் இடைநீக்கம் செய்யப்பட்டார், இதையடுத்து நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய மார்கோ ஸ்டான்கோவிக் காயம் காரணமாக காரணமாக வெளியேறினார். ஆனால், எமிலியோ ஆல்ஃபரோ மற்றும் மார்சின்ஹோ ஆகியோர் அணியில் இருப்பதால் புனே அணிக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியைப் பொறுத்தவரை நாளை தடுப்பாட்டத்தையே நம்பி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, கடந்த 6 ஆட்டத்தில் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளோம்.
இது குறித்து அணி வீரர்களிடம் பேசியுள்ளேன். நாளை விளையாடப் போகும் வீரர்களை தேர்ந்தெடுக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார். அப்போது 3 புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாட உள்ளோம் என தெரிவித்தார். நாளை களத்தில் இறங்கி விளையாடுவதற்கு முன்பு நல்ல வீரர்களை தேர்ந்தெடுத்து அனுப்பப் போவதாகவும் கிரிகோரி தெரிவித்தார்.
நெல்சன் மற்றும் கரன்ஜித் சிங் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கோல் கீப்பர் சரியான நிலையில் இல்லை என்பது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
நாளை இரு அணிகளுமே சிறப்பான பயிற்சி பெற்று களத்தில் இறங்க உள்ளனர். புனே அணியின் பயிற்சியாளர் ரெட்டி மிக நுணுக்கமான சில விஷயங்களை அணியினருக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இது எந்ந அளவுக்கு உதவும் என்பது நாளை தெரியும். இதே போல் சென்னை அணியும் தனது அடுத்த ஆட்டத்தை சிறப்பாக விளையாடும் என நம்பிக்கையுடன் உள்ளது.
(Photos Courtesy - ISL)