டெல்லி : டெல்லியில் டிசம்பர் 3 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 47 ஆவது கால்பந்து போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும், மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி டைனமோஸ் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே டெல்லி அணியின் லல்லியான்சுலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் அர்னால்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் மிலன் சிங் வெளியேறினார். ரெய்னர் களம் இறங்கினார். இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
அந்த இரண்டு 2 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து டெல்லி டைனமோஸ் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது, ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை ரஃபேல் பாஸ்டஸ் கோலாக மாற்றினார்.
இதையடுத்து ஆட்டத்தின் 52 ஆவது நிமிடத்தில் மும்பை அணியிள் செனாஜ் சிங்கிற்கும், 55 ஆவது நிமிடத்தில் ஜாய்னருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மார்டி கிரிப்ஸி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் கியானி ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து இரு அணிகளும் 2 - 2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன. ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னியர் ஒரு கோல் அடித்தார். இது மும்பை அணியின் மூன்றாவது கோலாகும்.
ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 73 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ப்ரீத்தம் கோட்டலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் பௌலோ மச்சாடோ ஒரு கோல் அடித்து அந்த அணியின் கோலை 4 ஆக உயர்த்தினார். இதனால் டெல்லி அணியின் முதல் வெற்றிக் கனவு நிறைவேறுவது மிக கடினம் என்ற நிலை ஏற்பட்டது.
ஆட்ட நேர முடிவில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து மும்பை அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் முன்னிலையில் இருந்த டெல்லி அணி இறுதியில் தோல்வி அடைந்தது. தற்போது டெல்லி ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது.
(Photos Courtesy - ISL)