டெல்லி : டெல்லி டைனமோஸ் எஃப்சி அணி தொடர்ந்து அதி வேகமாக அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த அணியினர் கடந்த சீசனின் போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் மிகுந்த ஏமாற்றத்தை தந்தனர். இந்த சீசனில் ரசிகர்கள் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஆண்டும் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
டெல்லி டைனமோஸ் அணி ஒன்பது போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளை மட்டும் பெற்று புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணியினர் 4 டிராக்கள் பெற்றுள்ள நிலையில் ஒரு போட்டியில் கூட அவர்கள் ஜெயிக்கவில்லை. அவர்கள் பல முறை வெற்றி பெறுவோம் என உறுதி அளித்தும் அதை நிறைவேற்றவில்லை. மேலும் தகுதி பெற வேண்டும் என்பதையே அந்த அணியினர் மறந்துவிட்டனர்.
மும்பை எஃப்சி அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஆட்டத்தில் தங்கள் வெற்றிக் கணக்கைத் தொடங்குவோம் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசப் கோம்பவு.
மும்பை சிட்டி அணிக்கு எதிராக நாங்கள் விளையாடப்போகும் ஆட்டம் முக்கியமானது. இது வரை ஒரு ஆட்டத்தில் கூட நாங்கள் ஜெயிக்கவில்லை என்றாலும் கடைசி இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடுவோம் என்கிறார் ஜோசப் கோம்பவு. மும்பை அணியை ஜெயிக்க நாங்கள் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
டெல்லி அணியினர் சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் தோல்வியையே தழுவுகின்றனர். ஆனாலும் இந்த சீசனில் நாங்கள் எங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்வோம் என்கிறார் ஜோசப் கோம்பவு.
கோவா மற்றும் பெங்களூரு அணிகளுக்கெதிராக நாங்கள் நன்றாக விளையாடினாலும் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. ஆனால் இந்த முறை கோல் அடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் எங்கள் அணி உள்ளது என்கிறார் ஜோசப் கோம்பவு.
மும்பை அணியைப் பொறுத்தவரை 9 நாட்களில் 3 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் இரண்டு மும்பைக்கு வெளியே உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.
டெல்லி அணியைப் பொறுத்தவரை அவர்களின் நிலைமை தற்போது கீழே இருந்தாலும், அவர்களின் ஆட்டம் மிக நன்றாக உள்ளது. பெங்களூருக்கு எதிராக அவர்களின் ஆட்டம் சிறப்பாகவும், கட்டமைப்புடனும் இருந்தது. டெல்லி அணியினர் முதல் பாதி ஆட்டம் வரை இரண்டு அல்லது மூன்று கோல்கள் அடிக்கக் கூடிய தகுதி உடையவர்கள் என்பதால் அவர்களின் ஆட்டத்தை நாம் மதிக்க வேண்டும் என்கிறார் ஜார்ஜ் கோஸ்டா.
மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்களது சொந்த மண் அல்லாது பிற மைதானங்களிலும் அவர்களது ஆட்டம் நல்ல ஃபார்மில் உள்ளது. பாலோ மச்சோவின் புத்திசாலித்தனமும் லூசியன் கோயன் மற்றும் சுபாஷிஷ் போஸ் ஆகியோரது வழிநடத்துதலாலும் மும்பை அணி வலுவான நிலையில் உள்ளது.
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இணைந்து மிகக் குறைவாக 7 கோல்கள் மட்டுமே அடித்துள்ளன. இந்த போட்டியில் இரு அணிகளின் இலக்குமே வெற்றிதான். யார் அதைத் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
(Photos Courtesy - ISL)