
மும்பை : மும்பையில் நேற்று (அக்டோபர் 27) நடைபெற்ற ஹீரோ இந்தியன் கால்பந்து போட்டியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 20 ஆவது கால்பந்து போட்டி மும்பையில் உள்ள அரினா ஸ்டேடியத்தில் மும்பை சிட்டி அணிக்கும் டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.
டாஸ் வென்ற மும்பை அணி இடது புறத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. இரு அணிகளும் கடுமையாக மோதின. வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் வீரர்கள் விளையாடியதால் ஆட்டத்தில் சூடு பறந்தது.
இந்நிலையில் ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடு சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர்.
ஆனால் இருதரப்பிலும் கோல் அடிக்க முடியவில்லை. மும்பை அணி வீரர்கள் தங்கள் சொந்த மண்ணில் ஒரு கோல் அடித்தது அந்த அணி ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்தது,
ஆட்டத்தன் இறுதியில் ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால் அப்போதும் அணிகள் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து மும்பை அணி 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் வினித் ராய் மாற்றப்பட்டார். 49 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ராணா கராமிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அடுத்து 67 ஆவது நிமிடத்தில் டெல்லியின் பிக்ராம்ஜித் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து டெல்லி மற்றும் மும்பை அணி வீரர்கள் மாற்றப்பட்டனர்.
இதையடுத்து நீண்ட நேரமாக இரு தரப்பினரும் கோல் அடிக்காததால் ரசிகர்களே சோர்வடைந்தனர்.
பின்னர் ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அர்னால்டு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இது மும்பை அணியின் இரண்டாவது கோல் ஆகும்.
இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆனால் கடைசி வரை டெல்லி அணியால கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து மும்பை அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.