ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் நவம்பர் 25 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 39 ஆவது கால்பந்து போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும், சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
இரு அணிகளுமே விறுவிறுப்பாக ஆடின. சென்னையின் எஃப்சி அணி இரண்டாவது வெற்றியை சுவைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் விளையாடியது. ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாப்லோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கார்லஸ் கோல் அடித்து அசத்தினார். பின்னர் 30 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கார்லசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிமிடங்களில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் 53 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் 55 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபாரூக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 62 மற்றும் 65 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ரஃபேல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 72 நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மரியோ ஒரு கோல் அடித்து அசத்தினார். இது ஜாம்ஷெட்பூர் அணிக்கு மூன்றாவது கோல் ஆகும். இதையடுத்து இரு அணிகளும் பரபரப்பாக விளையாடின.
இதைத் தொடர்ந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 5 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)