ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் நாளை நடைபெறும் ஹூரோ ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது ஜாம்ஷெட்பூர் அணி.
ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நாளை (அக்டோபர் 29) இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்த இரு அணிகளும் இதுவரை எந்த தோல்வியையும் சந்திக்கவி்ல்லை. தொடக்கத்தில் மும்பை அணியை வென்றபின் ஜாம்ஷெட்பூர் அணி மூன்று போட்டிகளை டிரா செய்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற கேரள அணி, அதன்பின் 2 போட்டிகளை டிரா செய்துள்ளது.
ஜாம்ஷெட்பூர் எஃப்சி, அணியைப் பொறுத்தவரை அவர்களின் ஆட்டம் ஒரு தனி பாணியில் உள்ளது. அந்த அணிவீரர்கள் களத்தில் ஆதிக்கம் செலுத்தி விளையாடினாலும், வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறிவிடுகிறார்கள், துல்லியத்தன்மை அவர்களிடம் இல்லை.
ஜாம்ஷெட்பூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரான டிம் காஹில் இன்னும் முழுமையாக உடல்தகுதி பெறவில்லை என்பது பயிற்சியாளர் சேஸர் ஃபெர்ரண்டோவுக்கு சிக்கலான விஷயமாகும்.
கேரள அணியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த ஃபெர்ரண்டோ மற்றும் மரியோ அர்சும் மெமோவும் முயன்று வருகிறார்கள். ஜாம்ஷெட்பூர் அணியின் மோபசிர் ரஹ்மான் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை என்பது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர் ஃபெர்ரண்டோ கூறுகையில், சர்வதேச லீக்கை பொருத்தவரை லீக்கில் 38 ஆட்டங்கள் இருக்கும். ஆனால் இங்கே 18 போட்டிகள் மட்டும்தான் இருக்கிறது. ஆதலால், ஒவ்வொரு போட்டியும் இறுதி ஆட்டம் போன்ற உணர்வை தருகிறது என்னை பொறுத்தவரை, நாளை நடைபெறும் போட்டி இறுதிப் போட்டி போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கேரள பிளாஸ்டர்ஸ் அணியைப் பொறுத்தவரை இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியது, ஆனால் இந்த சீசன் துவக்கத்தில் ATK அணியுடன் விளையாடியபோது 2-0 என்ற வெற்றிக்கு பின் சிறப்பாக முத்திரை பதிக்கவில்லை.
இது குறித்து பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கூறுகையில், திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டம் உட்பட அடுத்தடுத்த போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
ஆட்டத்தின் ஒட்டுமொத்த நேரமான 90-நிமிடங்களும் வீரர்கள் கவனத்துடன் விளையாட வேண்டும் என்பது விருப்பம்.
3 போட்டிகள் இடைநீக்கத்துக்குப்பின் அனாஸ் மீண்டும் விளையாட வருகிறார். அவர் அணிக்குள் வரும் போது இன்னும் அனைத்து வீரர்களும் உற்சாகமாக விளையாட முடியும் எனத் தெரிவித்தார்.