ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் நவம்பர் 1 அன்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 25 ஆவது கால்பந்து போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாட்டா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும், எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. ஜாம்ஷெட்பூர் அணி டாஸ் வென்று இடதுபுறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் போட்டி கடுமையாக இருந்தது. ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரின் மைக்கேல் சூசைராஜ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றனர். இதையடுத்து ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மார்ட்டடா ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் வீரர்கள் தவறவிட்டனர். பின்னர் ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.
அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவிலலை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணியும், கோவா அணியும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் அதாவது 50 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் மீண்டும் ஒரு அற்புதமான கோல் அடித்தார்.
57 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கௌரவ் வெளியேற்றப்பட்டு அவருக்குப் பதில் ஸ்மீத் பாசி களம் இறங்கினார். அவர் இறங்கிய 2 நிமிடத்தில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் மற்றும் கோவா அணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டம் விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த நிலையில் 77ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மீமோ ஒரு கோல் அடித்து அசத்தினார். இது அந்த அணியின் மூன்றாவது கோல் ஆகும்.
இதையடுத்து உடனடியாக 78 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்மீத் பாசி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் இரு தரப்பிலும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.
பின்னர் ஆட்டத்தில் கூடுதலான 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 4 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி, கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.