மும்பை : மும்பையில் டிசம்பர் 6 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 50 ஆவது கால்பந்து போட்டி மும்பையில் உள்ள அரினா அரங்கத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி மேற்கொண்டன. ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னர் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
பின்னர் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செனாஜ் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதியின் கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து முதல் பாதியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி முன்னிலை பெற்றது.
பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மோடோ ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து மும்பை சிட்டி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி இந்த சீசனில் மிகவும் பின்தங்கி, கிட்டத்தட்ட அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. மும்பை அணியோ வெற்றி மேல் வெற்றி குவித்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
(Photos Courtesy - ISL)