மும்பை : ஐ.எஸ்.எல் ஐந்தாவது சீசனின் தொடக்கத்தில் சரியாக சோபிக்காமல் தொடர் தோல்விகளை தழுவிவந்த மும்பை சிட்டி அணி, கோவா அணிக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு சரிவிலிருந்து மீண்டு தொடர் வெற்றிகளை குவித்து பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் நடந்துவருகிறது. இந்த சீசனில் பெங்களூரு எஃப்சி, மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் கோவா ஆகிய நான்கு அணிகளும் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. இந்த நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளன.
9 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 23 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு எஃப்சி அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடிவரும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 19 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் கோவா அணி 17 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் மும்பை சிட்டி அணி 10 போட்டிகளில் ஆடி 6 வெற்றியுடன் 20 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது. சீசனின் தொடக்கத்தில் மோசமாக ஆடிய மும்பை அணி, பிறகு அதற்கு நேர்மாறாக ஆடி வெற்றிகளை குவித்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது மும்பை அணி. அதிலும் கோவா அணிக்கு எதிரான போட்டியில் 5-0 என அடைந்த படுதோல்வி, அந்த அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த படுதோல்வி அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டாவை வெகுவாக பாதித்தது. இந்த படுதோல்விக்கு பிறகே மும்பை சிட்டி அணி வெகுண்டெழுந்தது. கோவாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு அணி வீரர்களின் அணுகுமுறையை மாற்றி உத்வேகமளித்தார் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.
கோவா அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா, அந்த போட்டியின் இரண்டாம் பாதியில் நாங்கள் எளிதாக விட்டுக்கொடுத்துவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 5-0 என தோற்றது ஒரு புறமிருந்தாலும் கடைசி 15 நிமிடங்களில் எங்கள் அணி ஆடிய விதம் மிகுந்த வருத்தமளிக்கிறது. கடைசி 15 நிமிடங்களில் போட்டி எப்போது முடியும் என்ற மனநிலையிலேயே வீரர்கள் களத்தில் இருந்தார்களே தவிர, அவர்கள் கடைசி வரை போராட வேண்டும் என நினைக்கவில்லை. கடைசி நிமிடங்களில் வீரர்களின் கவனம் போட்டியில் இல்லை. அதை நினைத்து எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஒரு கால்பந்து வீரனாக எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று மன வருத்தத்துடனும் ஆவேசத்துடனும் கூறினார்.
பயிற்சியாளர் கோஸ்டாவின் பேச்சு, மும்பை அணி வீரர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியதோடு அவர்களின் ஆட்டமுறையிலும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு வெகுண்டெழுந்த மும்பை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிறகு நடந்த 6 போட்டிகளில் 5ல் வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் 16 புள்ளிகளை குவித்து, தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது.
மும்பை அணியின் இந்த வளர்ச்சி, அபரிமிதமானது. தொடர் தோல்விக்கு பிறகு அதிலிருந்து மீண்டெழுந்த மும்பை அணி, அதன்பிறகு நடந்த போட்டிகளில் எதிரணிகளை மிரட்டும் அளவிற்கு மும்பை அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியது.
ஆரம்பத்தில் தொடர் தோல்விகளாலும் மோசமான ஆட்டத்தாலும் வீரர்கள் மனவலிமையுடன் செயல்படாததாலும் அதிருப்தியில் பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர், பின்னர் தங்கள் அணி வீரர்கள் களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது, கால்பந்து என்றாலே ஆக்ரோஷமாகத்தான் ஆட வேண்டும். இப்படியொரு அணிக்கு பயிற்சியளிப்பதற்கு நான் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
முதலில் வேதனைப்பட்ட பயிற்சியாளரை, பின்னர் தங்களை நினைத்து பெருமைப்பட வைத்ததே அந்த அணி வீரர்களுக்கு கிடைத்த வெற்றிதான்.
மும்பை அணி வீரர்களை பொறுத்தமட்டில், அந்த அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களான மோடோ சோகோ, அர்னால்டு ஐஸாகோ ஆகியோர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துவருகின்றனர். ஆரம்பத்தில் மிகவும் ஆவரேஜாக ஆடிய மச்சாடோ, பின்னர் ஃபார்முக்கு வந்து அசத்திவருகிறார். மிட் ஃபீல்டில் நின்று வீரர்களை வழிநடத்தும் பணியை செவ்வனே செய்துவருகிறார். தடுப்பாட்டத்தில் லூசியன் கோயனுக்கு சுபாசிஸ் போஸ் மற்றும் ஜோய்னர் உதவிகரமாக செயல்படுகின்றனர்.
கோவா அணிக்கு எதிரான படுதோல்விதான் மும்பை அணி வெகுண்டெழுவதற்கு காரணமாக அமைந்தது. அந்த தோல்விக்கு பிறகு மறுபிறவி எடுத்துள்ள மும்பை அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. சீசனின் எஞ்சிய போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
(Photos Courtesy - ISL)