மும்பை : மும்பை அரினா அரங்கில் நவம்பர் 24 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை - ஏடிகே அணிகளுக்கிடையேயான ஆட்டம் கோல் எதுவும் அடிக்காமல் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 38 ஆவது கால்பந்து போட்டி மும்பையில் உள்ள அரினா அரங்கில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும், ஏடிகே அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் பந்தை மும்பை அணி அடித்து ஆட்டத்தை தொடங்கி வைத்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின. இதில் ஒரு அணி மற்றொரு அணியை கோல் அடிக்கவிடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இரு அணிகளுமே கோல் அடிக்க தடுமாறின.
இதையடுத்து ஆட்டத்தின் இறுதியில் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடங்களிலும் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முதல் பாதி ஆட்ட இறுதி வரை கோல் இல்லாமலேயே முடிந்தது.
இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கோமல் தட்கல் வெளியேறியதைத் தொடர்ந்து ஜெயேஸ் ரானே களம் இறங்கினார்.
63 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அன்வர் அலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 67 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மிலன்சிங் வெளியேறினார். ரெய்னர் ஃபெர்ணான்டஸ் களம் புகுந்தார்.
ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் மானுவல் லாசன்ட்ரேட் வெளியேற்றப்பட்டு எல் நௌசர் களம் இறங்கினார்.
இதையடுத்து கூடுதலாக நான்கு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது மும்பை அணியின் ஃபெர்ணான்டஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அந்த நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முடிவில் மும்பை - ஏடிகே இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் 0 - 0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
(Photos Courtesy - ISL)