கௌஹாத்தி : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சியும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 18 ஆவது போட்டி கௌஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்தெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும் இடையே ஆன போட்டி நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறம் இருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஜாம்ஷெட்பூர் அணி ஆட்டத்தை மிக நன்றாக தொடங்கி ஆடியது. நார்த் ஈஸ்ட் அணி வீரர்களும் அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடினர்.
இதையடுத்து ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமியே, அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரௌலினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களும் மிகக் கடுமையாக எதிர்தாக்குதல் நடத்தினர். ஆனாலும் அந்த அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 45 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மிஸ்லேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆனாலும் ஜாம்ஷெட்பூர் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் 1 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணி முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 46 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளில் மாற்றம் செய்யப்பட்டன. நார்த் ஈஸ்ட் அணி அடித்த ஒரு கோலை சமன் செய்ய ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கடுமையாக மோதினர்.
இதையடுத்து ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபாருக் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 61 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீமுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
இதையடுத்து ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் மீண்டும் இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் அடிக்க முயன்றனர். ஆனால் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியவில்லை.
இதையடுத்து நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி ( 1-1 ) கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.