கௌஹாத்தி : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணி 6 ஆட்டங்களில் 11 புள்ளிகளுடன் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அந்த அணி தற்போது 5 ஆவது இடத்தில் இருந்தாலும் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் நன்கு விளையாடி அட்டவணையில் மேலும் உயர நல்ல வாய்ப்பு உள்ளது.
ஆனால் அந்த அணிக்கு ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த மூன்றுமே சொந்த மண்ணில் இல்லாமல் வேறு இடங்களில் விளையாடியபோதுதான். அதனால் தங்கள் சொந்த மண்ணான கௌஹாத்தி இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் போட்டியில் கேரளா அணியை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர்.
இந்த சீசனில் நார்த் ஈஸ்ட் அணி அடித்த கோல்களில் 50 சதவீதத்தை பர்த்தலோமிவ் ஆக்பேஷ் மட்டுமே அடித்துள்ளார். இந்த நைஜீரியனின் ஆட்டம் அந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளது.
காயம் காரணமாக ஆட்டத்தில் பங்கேற்காமல் இருந்த தடுப்பாட்டக்காரரான மிஸ்லாவ் கோமோர்ஸ்கி தற்போது மீண்டும் களம் இறங்குவதால் தங்கள் அணி சிறப்பாக செயல்படும் என்கிறார் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி.
காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடாமல் இருந்த வெளிநாட்டு வீரர் ஒருவர் தற்போது களமிறங்க உள்ளார். அது யார் என்று சொன்னால் எதிரணியினருக்கு அது சாதகமாக முடியும் என்கிறார் ஷட்டரி. பர்த்தலோமிக்கும் காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் இந்த முறை களம் காண்கிறார். இதே போல் காயமடைந்த சில இந்திய வீரர்களும் களம் இறங்குகின்றனர் என்றார் ஷட்டரி.
இதனிடையே கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஏடிகே அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றதைத் தவிர ஒரே ஒரு போட்டியில் கூட ஜெயிக்கவில்லை.
கேரளா அணியை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் போராடி வருகிறார். பெங்களூரு எஃப்சி மற்றும் எஃப்சி கோவாவிற்கு எதிரான இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து கேரளா அணி நாளை விளையாடுகிறது.
கேரளா அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் கோல்கள் அடிக்க போராடி வருகின்றனர். அவர்கள் கோல்கள் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று குற்றம்சாட்டீகிறார் டேவிட் ஜேம்ஸ்.
கோவா அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தைத் தவிர மற்ற போட்டிகளில் கேரளா அணியினர் சிறப்பாக விளையாடினர். கோவா அணி சிறந்த அணி என்றும் அவர்களின் திறமையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் ஜேம்ஸ் தெரிவித்தார். பெங்களூரு அணியுடன் விளையாடியது உட்பட மற்ற ஆறு போட்டிகளிலும் எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஜேம்ஸ் கூறினார்.
நாளைய போட்டியில் மூன்று கோல்கள் அடிப்பது எங்கள் இலக்கு என்றும், கண்டிப்பாக நாங்கள் வெல்வோம் என்றும் ஜேம்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சீசனில் எஃப்.சி கோவா அணிக்கு எதிராக அனாஸ் எடத்தொடிகா கடைசி நிமிடம் வரை போராடினார். தற்போது ஜேம்ஸ் ஒக்பெச்சே மற்றும் ஃபெடெரிகோ கால்கோ ஆகியோருக்கு எதிராக அனைத்து இந்திய வீரர்களையும் களமிறக்க முடிவு செய்துள்ளார் ஜேம்ஸ்.
கேரளா அணி குறித்து கருத்து தெரிவித்த எல்கோ ஷட்டரி, அந்த அணி எதிர்பாராமல் விளையாடக் கூடியவர்கள் என்றார். எங்கள் அணியின் லென் டங்கல் மற்றும் ஹாலிச்சரன் போன்ற வீரர்கள் இருப்பது, கேரளா அணியும் வலிமை மிகுந்ததுதான் என்கிறார் அவர்.
கேரளா அணி வீரர்களின் ஆட்டம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் அவர்களது பலவீனத்தையும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன் என எல்கோ ஷட்டரி தெரிவித்துள்ளார்.
நார்த் ஈஸ்ட் அணிக்கு தங்கள் சொந்த மண்ணில் வெற்றி கிடைக்குமா ? அவர்கள் அட்டவணையில் நான்காவது இடத்தைப் பிடிப்பார்களா? அல்லது கேரள பிளாஸ்டர்ஸ் அணி மூன்று கோல்கள் அடிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(Photos Courtesy - ISL)