கௌஹாத்தி : கௌஹாத்தியில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி நார்த் ஈஸ்ட் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 32 ஆவது கால்பந்து போட்டி கௌஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே மும்பை அணியின் அர்னால்டு அற்புதமாக ஒரு கோல் அடித்து நார்த் ஈஸ்ட் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 9 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் லூசியனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் மீண்டும் மும்பை அணியின் ஸ்னேஜ் சிங்கிற்கு மஞ்சள்அட்டை காண்பிக்கபட்டது.
தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் கடுமையாக மோதினர், மும்பை அணி அடித்த ஒரு கோலை சமன் செய்வதற்காக நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் கடுமையாகப் போராடினர்.
ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராபர்ட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 3 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது..
அந்த நிமிடங்களில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் மும்பை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. மும்பை அணியை சமன் செய்ய நார்த் ஈஸ்ட் அணியினர் கடுமையாக போராடினர். ஆட்டத்தில் 64 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியிலும் 67 ஆவது நிமிடத்தில் மும்பை அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
69 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மேட்டா என்ற வீரருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஆட்டத்தின் 86 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சுபாஷிஸ் போசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மேட்டிசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்ட்டன. அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை என்பதால் மும்பை அணி , நார்த் ஈஸ்ட் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)