கொல்கத்தா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் முதல் இடத்தை பெற மிகவும் முனைப்பாக இருக்கும் ஏடிகே அணி, நாளை கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.
எஃப்சி கோவாவை விட மூன்று புள்ளிகளும், பெங்களூரு எஃப்சி அணியை விட ஒரே ஒரு புள்ளியும் குறைவாக பெற்று தற்போது பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள ஏடிகே, முதலிடத்தை பெற திங்களன்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்னும் நிலையில் உள்ளது. தன்னுடைய கடந்த போட்டியில் எஃப்சி கோவாவை வென்றுள்ள ஏடிகே, கடந்த ஏழு போட்டிகளில் வெற்றியையே சுவைக்காத, பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியுடன் நாளை மோதுகிறது.
சொந்த மண்ணில் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஏடிகே, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை தோற்கடிக்க தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கும். வெளியூர் ஆட்டங்களில் இது வரை மூன்று கோல்களை மட்டுமே அடித்துள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, ஒரு பெரும் சவாலை நாளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இது வரை எட்டு கோல்களை அடித்துள்ள ஏடிகே அணியின் ராய் கிருஷ்ணா, அந்த அணியின் மிகப்பெரிய பலமாக இருப்பார். ஏடிகே அணியின் மேலாளர் ஆன்டானியோ ஹபாஸுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் ராய் கிருஷ்ணா, கடந்த நான்கு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், தனது அணியினருக்கு பெரிதும் உதவியாய் இருந்தார். நாளைய போட்டியில் தனது திறமையை அவர் சிறப்பாக வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"திங்களன்று நடைபெறவிருக்கும் போட்டி எங்களுக்கு சவலானதாகவே இருக்கும். ஏனென்றால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி நன்றாக விளையாடுகிறது. இரண்டு புதிய வீரர்களை தன்னுடன் இணைத்துள்ளது. இதர அணியினரை விட இரண்டு ஆட்டங்கள் குறைவாகவே ஆடியுள்ளது. எனவே, அவர்களுடனான போட்டி எங்களுக்கு கடினமானதாகவே இருக்கும். நாங்கள் அதற்க்காக தயாராகி வருகிறோம்," என்கிறார் ஹபாஸ்.
ராபர்ட் ஜர்னி தலைமையிலான நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி நாளை தோற்றால் தகுதி சுற்றி இடம்பெறுவது கடினமானதாகி விடும். "எங்களது நிலையை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். எந்த சிறு வாய்ப்பையும் தவற விடக் கூடாது என நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். வெற்றி பெற எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்," என்கிறார் ஜர்னி.
வெளியூர் ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், ஆன்டி கீயோக்கை சமீபத்தில் அணியில் இணைத்துள்ளதால் கோல்களை அடிக்கும் நம்பிக்கையில் உள்ளது. அடிபட்டு வெளியேறிய அசமோ கியானுக்கு பதில் அணியில் இடம் பிடித்துள்ள கீயோக், கியான் விட்டு சென்ற பணியை முடிப்பார் என நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி நம்புகிறது. சைமன் லுன்டேவாலையும் அணியில் சேர்த்துள்ளதால், ஏடிகேவுக்கு 'டஃப் ஃபைட்' கொடுக்கும் முடிவில் அந்த அணி உள்ளது.
"ஆன்டி மிகவும் சிறப்பான வீரர், நாங்கள் அவரின் திறமையின் மீது மிகுந்த நம்பிக்கையில் உள்ளோம். சைமன் இரு தினங்களுக்கு முன்பு மட்டுமே சேர்ந்துள்ளதால், அவர் அடுத்த ஆட்டத்தில் இருந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம்," என்கிறார் ஜர்னி. வங்கத்தில் கர்ஜிக்கப் போவது எந்த சிங்கம்? விடை தெரியும் நாளை.