கொல்கத்தா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே மற்றும் ஒடிசா எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஏடிகே எஃப்சி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 77வது நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெற்றது. எஃப்சி கோவாவை விட மூன்று புள்ளிகள் குறைவாக பெற்று பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த ஏடிகே, முதலிடத்தை பெற ஒடிசா எஃப்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்னும் நிலையில் இருந்தது.
சொந்த மண்ணில் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஆண்டானியோ ஹபாஸ் தலைமையிலான ஏடிகே, ஒடிசா எஃப்சியை தோற்கடிக்க மொத்த பலத்துடன் களமிறங்கியது. அதே சமயம், ஆறாவது இடத்தில் இருந்த ஜோஸப் கொம்பாவ் தலைமையிலான ஒடிசா எஃப்சியோ, டாப் நான்கு அணிகளில் ஒன்றாக இடம் பெற கடுமையான முயற்சிகளை எடுத்தது.
டாஸ் வென்ற ஒடிசா அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. கோல்கள் யாரும் அடிக்காத நிலையில், 29வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் சிஸ்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 41வது நிமிடத்தில் அதே அணியின் நாராயணுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வரும் நிலையிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பின்னர் ஒரு கூடுதல் நிமிடம் அளிக்கப்பட்டது. அப்படியும் யாரும் கோல் அடிக்கவில்லை. முதல் பாதியும் முடிவுக்கு வந்தது. நேற்றைய ஆட்டம் போல் இந்த ஆட்டமும் எந்த அணியும் கோல் அடிக்காமலேயே முடிவுக்கு வந்து விடுமோ என்று ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.
அவர்களுக்கான பதில் சீக்கிரமே கிடைத்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 49வது நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா, ரசிகர்களின் பலத்த உற்சாகத்துக்கு இடையே ஒரு கோல் அடித்தார். அதே உத்வேகத்துடன் கிருஷ்ணா 60வது நிமிடத்தில் இன்னொரு கோலை அடித்தார். இதனால் ஐடிஎப்சி அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
அதோடு கிருஷ்ணாவின் அதிரடி முடிந்து விடவில்லை. அறுபத்தி மூன்றாவது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்து ரசிகர்களை உற்சாகத்திலும் எதிரணியினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார். இதன்பிறகே ஒடிசா அணி சுதாரித்தது. 67வது நிமிடத்தில் அந்த அணியின் ஒன்வு ஒரு கோல் அடித்தார்.
இதைத் தொடர்ந்து 68வது நிமிடத்தில் ஏடிகே எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. இதற்கு அடுத்த நிமிடத்தில் ஒடிசா அணி ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று மாற்றங்களை தனது அணியில் செய்தது. 75வது நிமிடத்தில் ஏடிகே அணி ஒரு மாற்றத்தை செய்த நிலையில், 80வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் நந்தாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 82வது நிமிடத்தில் ஏடிகே, அணியில் இன்னொரு மாற்றத்தை செய்தது.
பின்னர் ஒடிசா எஃப்சி அணியின் ஜெரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டம் முடிவுக்கு வரும் வேளையில் நான்கு நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டன. 90வது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜவிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் ஏடிகே அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.