சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 78வது நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஞாயிறன்று நடக்கிறது.
தற்சமயம் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சி, கோவா மற்றும் ஏடிகே ஆகிய அணிகளை முந்தி முதலிடத்துக்கு வர முனைப்பாக உள்ளது. ஐந்தாம் இடத்தில் உள்ள சென்னையின் எஃப்சியோ, எப்படியாவது முன்னேறி முதல் மூன்று அணிகளில் ஒன்றாக வர வேண்டுமென்பதில் குறியாக உள்ளது.
ஒவன் கொய்லி தலைமையிலான சென்னையின் அணி தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளது. கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றுள்ள அந்த அணி, சமீபத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை 6க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்றது. நெரிஜுஸ் வல்க்ஸிஸ், ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் லல்லியான்ஜுயாலா சங்க்டே ஆகிய வீரர்கள் சென்னையின் எஃப்சிக்கு வலு சேர்க்கிறார்கள்.
"வெற்றியை சுவைக்க அடித்து ஆட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். தனிப்பட்ட சவால்களும் காத்திருக்கின்றன. சுனில் சேத்ரி மற்றும் டேஷோர்ன் பிரவுன் ஆகியோர் சிறந்த ஆட்டக்காரர்கள். அதுவும் பிரவுன், எங்கள் அணிக்கு எதிராக நன்றாகவே விளையாடி உள்ளார்," என்கிறார் கொய்லி. இவரது தலைமையில், சென்னையின் எஃப்சி அணி 8 ஆட்டங்களில் 22 கோல்களை அடித்துள்ளது.
"கொய்லியின் வருகைக்கு பிறகு சென்னையின் எஃப்சி அணியில் ஒரு புதிய உத்வேகம் உள்ளது உண்மை தான். கலை நயத்துடன் அவர்கள் விளையாடுகிறார்கள். நிறைய கோல்களை அடிப்பதோடு மட்டுமில்லாமல், எதிரணியினர் கோல் அடிப்பதையும் அவர்கள் நன்றாகவே தடுக்கின்றனர்," என்கிறார் பெங்களூரு எஃப்சி அணியின் கோச் கார்லெஸ் குட்ராட்.
மேலும் பேசிய அவர், "சென்னையின் எஃப்சி அணியினர் சிறப்பான நிலையில் உள்ளனர். ஆனால், நான் ஏற்கனவே கூறியதை போல, எப்போதும் நன்றாகவே விளையாடுபவர்கள், ஒரு நாள் சரியாக ஆட முடியாமல் போகலாம். இது அனைவருக்கும் நடக்கக் கூடியது தான்," என்றார்.
அனிருத் தாபாவின் தற்காலிக வெளியேற்றம் சென்னையின் எஃப்சி அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகும். ஆனால், அவருக்கு பதிலாக, ஜெர்மன்ப்ரீத் சிங் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமாஸ் டெல்காடோ, எரிக் பார்டலு மற்றும் சுனில் சேத்ரி ஆகியோர் பெங்களூரு எஃப்சிக்கு பலம் சேர்ப்பதை அறிந்தே வைத்திருக்கிறார் கொய்லி.
"நாங்கள் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் இருப்பதை நன்றாக அறிந்தே வைத்துள்ளோம். பெங்களூரு அணியை எதிர்கொள்வது ஒரு சவால் தான். ஆனால், அதை சமாளிக்க நாங்கள் தயராக இருக்கிறோம். எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டோம். மூன்று முக்கிய புள்ளிகளை எடுக்க நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்," என்கிறார் கொய்லி.
"சென்னையின் எஃப்சியை நாங்கள் ஜெயித்தே ஆக வேண்டும். ஏனென்றால் ஐஎஸ்எல்லில் முதலிடம் பிடிப்பதோடு மட்டுமில்லாமல், ஏஎஃப்சியிலும் இடம் பெற வேண்டுமென்பதே எங்கள் லட்சியம். அதற்கு தேவையானதை கட்டாயம் செய்வோம்," என்கிறார்.
பலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால், சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.