ஹபாஸ் இருக்கும் வரை ஏடிகேவுக்கு வெற்றி தான்.. ஐஎஸ்எல்-இன் சிறந்த பயிற்சியாளர்!
கொல்கத்தா : ஜாவியர் ஹர்ணான்டசின் அதிரடி ஆட்டமும், அரிந்தம் பட்டாச்சார்ஜாவின் அற்புத கோல் கீப்பிங்கும், ஏடிகே எஃப்சிக்கு இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சிக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கோவாவின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை இரவன்று பெற்றுத் தந்தது. இதன் மூலம், இதுவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ள ஒரே அணியாக ஏடிகே எஃப்சி திகழ்கிறது.
ஏடிகே எஃப்சியின் வெற்றி பயணம், 2019ன் கோடை காலத்தில் ஆன்டானியோ ஹபாஸை தலைமை கோச்சாக மீண்டும் அணிக்கு வரவேற்ற போதே தொடங்கியது என கூறலாம். ஸ்பைன் நாட்டை சேர்ந்த கால்பந்து வல்லுனரான இவர், 2014ல் இதே அணியை ஐஎஸ்எல்லின் முதல் சீசனிலேயே வெற்றியை நோக்கி அழைத்து சென்றது நினைவிருக்கலாம்.

அனுபவம் வாய்ந்த ஹபாஸுக்கு கால்பந்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். வலுவான அணியை இந்த சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பே கட்டமைத்த அவர், அந்த அணி இறுதி போட்டியில் கோப்பையை வெல்லும் வரை தன்னால் ஆன அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து, மொத்த வித்தையையும் இறக்கினார்.
"ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை போல, நானும் ஏடிகே எஃப்சி மீது அன்பை வைத்துள்ளேன். அதனால் தான், ஏடிகே எஃப்சி என்னை ஜூனில் அழைத்த போது, நான் உடனே இணைய ஒத்துக் கொண்டேன். முதல் சீசனில் இருந்தே ஏடிகே எஃப்சி என்றாலே எனக்கு ஸ்பெஷல் தான்," என்கிறார்.
அனைத்து வீரர்களையும், அவர்களின் திறமையையும் அழகாக ஒன்றிணைப்பதில் ஹபாஸ் வல்லவர். வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் இணைந்துள்ள இந்த அணியை ஒற்றுமையாக தொடக்கம் முதல் இறுதி வரை வழி நடத்தினார் ஹபாஸ்.
ஏடிகே எஃப்சியை பொறுத்தவரை ஜனவரி ஒரு முக்கியமான மாதம். ஏனென்றால், முதல் நான்கு இடங்களில் ஒன்றை பெற அந்த அணி மும்முரமாக உழைத்துக் கொண்டிருந்த வேளையில், ஏடிகேவின் உரிமையாளர்களான ஆர்பிஎஸ்ஜி குழுமம், ஐ லீக் கிளப்பான மோஹன் பகனின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியதாக அறிவித்தது.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், தற்போது இரண்டு அணிகளுமே தத்தமது போட்டிகளில் கோப்பையை வென்று, கொல்கத்தாவை இந்திய விளையாட்டுத் துறையின் முக்கிய கேந்திரமாக மாற்றியுள்ளன. "மோஹன் பகன் என்பது இந்தியாவின் பெரிய கிளப்புகளில் ஒன்று. நாங்களும் அவ்வாறே திகழ ஆசைப்படுகிறோம்," என்கிறார் அட்லெடிகோ மாட்ரிட்டின் முன்னாள் மேலாளர்.
ஏடிகே எஃப்சி அணி இனி இந்தியா முழுவதிலுமுள்ள கால்பந்து ரசிகர்களால் உற்று நோக்கப்படும். அடுத்த சீசனில் அந்த அணி இந்தியா சார்பாக ஏசியன் கிளப் போட்டிகளிலும் கலந்து கொண்டு ஆசிய அளவில் முதன்மை பெற முயலும். ஹபாஸ் உடன் உள்ளதால், வெற்றி எப்போதுமே ஏடிகே பக்கம் தான்.
Photos Courtesy : ISL Media


Click it and Unblock the Notifications