ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற உள்ளது.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 73வது நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாட்டா விளையாட்டு வளாகத்தில் நடக்கிறது.
இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முதலிடத்துக்கு முந்திக் கொண்டிருக்கும் ஏடிகேவை, 'கம்பேக்'குக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி தனது சொந்த மண்ணில் சந்திக்கிறது. கடந்த ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியை சந்தித்துள்ள ஜாம்ஷெட்பூர் எஃப்சி, ஞாயிறன்று நடைபெறப் போகும் ஆட்டத்தை மலை போல் நம்பியுள்ளது.
"எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாகவே கருதுகிறோம். இந்த சீசனிலேயே இந்த போட்டி தான் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். ஏனென்றால், நாங்கள், ஒரு வலுவான டீமை எதிர்த்து ஆடவிருக்கிறோம். இது எங்களுக்கு மிகப் பெரிய சவால். டாப் நான்கில் இடம் பெறுவதற்கு கடைசி வாய்ப்பு," என்கிறார் ஜாம்ஷெட்பூர் எஃப்சியின் இரியான்டோ.
அடிபட்ட பின் சிங்கமெனெ களம் திரும்பி இருக்கும் செர்ஜியோ காஸ்டெல், கடந்த இரு ஆட்டங்களில் தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், டிரி போன்றோர் அணியில் இல்லாதது, ஜாம்ஷெட்பூருக்கு சற்றே பின்னடைவு தான். இருந்த போதிலும், சென்னையின் எஃப்சி உடனான தோல்விக்கு பிறகு, ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி மீண்டு வர மும்முரமாக உள்ளது.
ஏடிகே அணியை பொருத்த வரை, முதலிடத்துக்கு வர எஃப்சி கோவா மற்றும் பெங்களூரு எஃப்சியுடன் கடும் மோதலில் உள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம், அது தன் லட்சியத்தை எட்டக்கூடும். மேலும், ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கிலும் இடம் கிடைக்கலாம்.
"எங்கள் மீது அழுத்தம் உள்ளது உண்மை தான். சில சமயம் இந்த அழுத்தம் கால்பந்துக்கு நல்லதல்ல. ஆனால், நாங்கள் எங்கள் கனவை நனவாக்குவதற்கு முழு முனைப்புடன் உள்ளோம்," என்கிறார் ஏடிகேவின் கோச் ஆன்டானியோ ஹபாஸ்.
காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களில் பங்கு பெறாமல் இருந்த டேவிட் வில்லியம்ஸ் இந்தப் போட்டியில் மறுபடி களமிறங்குகிறார். இது ஏடிகேவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
பிரீத்தம் கோடல், ஆகஸ் மற்றும் சுமித் ரதி ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். ராய் கிருஷ்ணா மற்றும் வில்லியம்ஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களும் தன்னிடத்தே இருப்பதால், ஜாம்ஷெட்பூரை ஏடிகே வெல்லும் என்றே பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்படுகிறது.