ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஏடிகே எஃப்சி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 73வது நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாட்டா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முதலிடத்துக்கு முந்திக் கொண்டிருக்கும் ஏடிகேவை, 'கம்பேக்'குக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜாம்ஷெட்பூர் தனது சொந்த மண்ணில் சந்தித்தது.

கடந்த ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியை சந்தித்துள்ள ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த ஆட்டத்தை மலை போல் நம்பியிருந்தது. முதலிடத்துக்கு வர எஃப்சி கோவா மற்றும் பெங்களூரு எஃப்சியுடன் கடும் மோதலில் உள்ள ஏடிகே அணியோ, இந்த ஆட்டத்தில் வென்றால் தனது லட்சியத்தை எட்டுவதோடு மட்டுமில்லாமல், ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கிலும் இடம் பெற வாய்ப்புண்டு என்னும் நிலையில் இருந்தது.
டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே ஏடிகே அணியின் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து தனது அணியினருக்கு உற்சாகத்தையும், ஜாம்ஷெட்பூர் அணிக்கு அதிர்ச்சியையும் அளித்தார். 14வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் பஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இருபத்தி ஏழாவது நிமிடத்தில் அதே அணியின் ஜிட்டுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதி முடிவுக்கும் வரும் வரை மேலும் கோல் எதுவும் விழாத நிலையில், 45வது நிமிடத்தில் 3 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏடிகே எஃப்சி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 46வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 52வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஜிட்டுவுக்கு இரண்டாம் முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சோதனை மேல் சோதனையாக 53வது நிமிடத்தில் அதே அணியின் ஜோய்னருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

ஐம்பத்தி ஒன்பதாவது நிமிடத்தில் ஏடிகே எஃப்சியின் எடு கார்சியா ஒரு அபார கோல் அடித்து தனது அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். யார் கண் பட்டதோ, 63வது நிமிடத்தில் எடு கார்சியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 75வது நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் அந்த அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
76வது நிமிடத்தில் ஏடிகே அணியிலும், 77வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 81வது நிமிடத்தில் ஏடிகே அணியில் மீண்டுமொருமொறை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 83வது நிமிடத்தில் அந்த அணியின் பிரபிருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 87வது நிமிடத்தில் பிரபிர் அணியிலிருந்து வெளியேறி, அவருக்கு பதில் அங்கித் உள்ளே வந்தார்.

இந்நிலையில், 88வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டம் முடிவுக்கு வரவிருந்த நிலையில் 90வது நிமிடத்தில் நான்கு நிமிடங்கள் கூட்டப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் ஏடிகே எஃப்சி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Photos Courtesy : ISL Media