ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் எஃப்சி கோவா அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 85வது நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில் புதனன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 36 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ள எஃப்சி கோவா அணி, 17 ஆட்டங்களில் 18 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
மும்பை சிட்டி எஃப்சிக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டம் வரை இரண்டாம் இடத்தில் இருந்த எஃப்சி கோவா, சென்ற புதனன்று சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணியை 5- 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து முதலிடத்துக்கு முன்னேறியது.
எனவே, கடும் உழைப்புக்கு பிறகு கைப்பற்றிய முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள அது எந்த வாய்ப்பையும் நழுவ விடாது. அதோடு, அந்த அணி வென்றால் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பிடிக்கும் முதல் இந்திய அணி என்ற பெருமையையும் பெறலாம்.
கோச்சாக இருந்த சேர்ஜியோ லோபரா மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு கிளிஃபர்டு மிராண்டா வந்த பின்பும் வெற்றி பயணத்தை மாற்றமில்லாமல் தொடர்ந்து வரும் எஃப்சி கோவா அணிக்கு, ஃபேர்ரன் கொரோமினாஸ், எடு பிடியா, அகமது ஜஹோஹ் மற்றும் ஹூகோ பவுமஸ் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.
"தொடக்கத்தில் இருந்தே, முதல் அணியாக வர வேண்டும் என்பது தான் எஃப்சி கோவாவின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பெறும் எங்கள் இன்னொரு முக்கிய இலட்சியத்தையும் எட்டுவோம் என்று நம்புகிறோம்," என்கிறார் மிராண்டா.
கடந்த இரண்டு ஆட்டங்களை டிராவில் முடித்துள்ள ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, எட்டாவது இடத்திலிருந்து இன்னும் பின்னோக்கி சென்று விடாமல், முன்னோக்கி செல்ல வேண்டும் என்னும் முனைப்போடு உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் சமன் செய்த அந்த அணி, 13ஆம் தேதி ஹைதரபாத் எஃப்சியுடன் ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.
எனவே, இந்த ஆட்டம் தன்னை நிரூபிக்க ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு ஒரு சிறந்த தருணம் ஆகும். எனினும், எதிரில் இருப்பது மகா பலம் பொருந்திய எஃப்சி கோவா என்பது தான் சற்று வருத்தம் அளிக்கும் விஷயம். இருந்தாலும், செர்ஜியோ காஸ்டல், நோவ் அகோஸ்டா, டேவிட் கிராண்ட் மற்றும் ஆய்ட்டர் மன்ரோய் ஆகியோர் கோச் இரியாண்டோவுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இரியாண்டோ கூறுகையில், "இது தான் எங்களின் மோசமான சீசன். எங்களுக்கு சிக்கல்கள் இருந்தன. கால்பந்து என்பது வேகமாக முடிவுகளை எடுத்து உடனுக்கடன் பிரச்சினைகளை களையும் ஆட்டம். எங்களின் இந்த நிலைமைக்கு அணியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்று, வரும் காலங்களில் அணியின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். இந்த வருடம் நாங்கள் கற்ற பாடங்கள் இனி வரும் காலங்களில் எங்களை பலப்படுத்தி கொள்ள உதவும்," என்கிறார்.
இரியாண்டோவும் அவரது வீரர்களும் இந்த ஆட்டத்தில் அற்புதத்தை எதிர்பார்த்து கொண்டிருக்க, எஃப்சி கோவா அணி, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பிடிக்குமா? என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.