கொச்சி : தென் இந்தியாவின் முக்கிய அணிகளான கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி இடையே நாளை கொச்சியில் நடைபெற உள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் (14 ஆட்டங்களில் 14 புள்ளிகள்) உள்ள ஈல்கோ ஷட்டோரி தலைமையிலான கேரளா அணி, ஜவஹர்லால் நேரு சர்வதேச அரங்கில் நடைபெற உள்ள போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற முடியும்.
சென்னையின் எஃப்சி இது வரை 13 ஆட்டங்களில் 18 புள்ளிகளை எடுத்துள்ளது. நாளை கேரளாவை வென்றால், ஒடிசா எஃப்சிக்கு இணையான இடத்தை சென்னை பெறலாம். "கால்பந்தில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒடிசா அணி தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. நாங்கள் சற்றே பின்தங்கியிருந்தோம். பின்னர் நாங்கள் இரு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியடைந்தோம். ஆகையால் எந்த அணி வேண்டுமானாலும் டாப் 4க்கு போகலாம்," என்கிறார் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் துணை கோச் இஷ்ஃபாக் அகமது. ஷட்டோரி சஸ்பென்ட் செய்யப்பட்டதால், இவர் தற்போது அணிக்கு பயிற்சி அளிக்கிறார்.
2020ம் ஆண்டை இரு தொடர் வெற்றிகளோடு கேரளா சிறப்பாக ஆரம்பித்தாலும், ஜாம்ஷெட்பூர் மற்றும் கோவா அணிகளிடம் அடைந்த தோல்விகள் மூலம் பின்னடவை சந்தித்தது. இந்த இரு ஆட்டங்களில் கேரளா நன்றாக விளையாடி இருந்தாலும், சில தவறுகளால் தோற்க நேர்ந்தது.
"நாங்கள் சிறப்பாகத் தான் விளையாடி வருகிறோம். கோவாவை போன்ற வலுவான அணியை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. இருப்பினும் நாங்கள் பலத்த போட்டியை கொடுத்தோம். ஆனால், ஒரு சில தவறுகள் எங்களின் வெற்றியைத் தடுத்தது. அதை தவிர்க்க நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்," என்கிறார் இஷ்ஃபாக்.
விக்டர் டிரொபரோவ் மற்றும் மௌஸ்தபா போன்றோர் அணியில் இல்லாதது கேரளா பிளாஸ்டர்சுக்கு நஷ்டம் தான் என்றாலும் ரஃபேல் மெஸ்ஸி பவுலி மற்றும் பார்தோலோமேவ் ஒபிச்சி ஆகியோர் அந்த அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
சென்னையின் எஃப்சி அணியை பொறுத்தவரையில், கடந்த மூன்று ஆட்டங்களில் தொடர் வெற்றியை பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளனர். ஓவென் கோய்லே தலைமையிலான அணி, ஐஎஸ்எல் டாப் ஸ்கோரரான நெரிஜுஸ் வல்ஸ்கிஸ் (10 கோல்கள்), ஆன்ட்ரி ஷெம்ப்ரி மற்றும் ரஃபேல் கிரிவெல்லாரோ போன்ற சிறப்பான வீரர்களை பெற்றுள்ளது. அனிருத் தாபா மற்றும் எட்வின் வன்ஸ்பால் ஆகியோரும் அணிக்கு வலு சேர்ப்பார்கள் என்றே நம்பப்படுகிறது.
ISL 2019-20 : ரொம்ப ஈஸி.. ஹைதராபாத் அணியை ஊதித் தள்ளிய பெங்களூரு!
இருந்தாலும், கோச் ஓவன் கோய்லே தனது அணியினரிடம் இருந்து இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார். "நாங்கள் எங்கள் திறமையை நன்றாக நிரூபித்துள்ளோம். இருப்பினும் இன்னும் இன்னும் எங்களை மெருகேற்றி வருகிறோம். இது எங்களை புள்ளிகள் பட்டியலில் முன்னேறி செல்ல உதவும். கேரளா அணியில் பலமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை மதிக்கும் அதே வேளையில், அவர்களை எதிர்கொள்ளவும் நாங்கள் தயராக உள்ளோம். வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை நிறையவே உள்ளது," என்கிறார். மலையாளக் கரையோரம் தமிழ் பாட்டு கேட்குமா?
Photos Courtesy : ISL Media