மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 75வது நாள் ஆட்டம் மும்பை ஃபுட்பால் அரீனாவில் நடைபெற்றது. நான்காம் இடம் பெற சென்னையின் எஃப்சி உடன் கடும் போட்டியில் உள்ள மும்பை சிட்டி அணிக்கு இன்றைய ஆட்டம் மிக முக்கியமான ஒன்றாகும்.
பலம் கொண்ட எஃப்சி கோவா மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுடன் மோதிய கடந்த இரு ஆட்டங்களும் மிகவும் சவாலாக அமைந்து விட்டதால், ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை சிட்டி எஃப்சி அணி தனது திறமையை ஜாம்ஷெட்பூருக்கு எதிராக காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஏடிகே உடனான தோல்விக்கு பிறகு மும்பையை களம் கண்ட ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, எதிரணியினருக்கு எக்கச்சக்க கோல்களை கடந்து ஆட்டங்களில் வாரி வழங்கி, 16 புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருந்தது. எனவே டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பெறுவதற்கு இந்தப் போட்டியை பயன்படுத்திக் கொள்ள அது மும்முரமாக இருந்தது.
டாஸ் வென்ற மும்பை அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 7வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டா, ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். 8வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியின் ரபீக்குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முப்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மெமோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 42 வது நிமிடத்தில் மும்பை அணியின் சவுரவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
45 ஆவது நிமிடத்தில் 2 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், மும்பை சிட்டி எஃப்சி, தனது அணியில் 46வது நிமிடத்தில் மாற்றங்களை செய்தது. 60வது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி தனது அணியின் முதல் கோலை அடித்தார். 64வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 67வது நிமிடத்தில் அந்த அணியின் நரேந்தருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 80வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 85வது நிமிடத்தில் அந்த அணியில் மீண்டும் ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 88 ஆவது நிமிடத்தில் மும்பை அணி ஒரு மாற்றத்தை செய்தது. ஆட்டம் டிராவில் முடிவடைந்தது என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் 90 வது நிமிடத்தில் 4 நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் சந்திப்புக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. உடனே மும்பை அணியின் பித்தியானந்தா ஒரு கோல் அடித்தார்.
பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Photos Courtesy : ISL Media