கவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 76வது நாள் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெடிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. தகுதி சுற்றில் இடம் பெறுவதற்கு கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடனான இந்த ஆட்டம் உட்பட எதிர்வரும் அனைத்து ஆட்டங்களிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலையில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி களமிறங்கியது.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை பொறுத்தவரை, சீசனின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், சென்னையின் எஃப்சிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 6க்கு 3 என்ற கோல் கணக்கில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த மூன்று ஆட்டங்களில் 12 கோல்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்த அந்த அணி, ஆட்டத்தை வெகுவாக நம்பியிருந்தது.
அதோடு, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ஆகிய அணிகள், பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்ததால், இந்த போட்டி, கிட்டத்தட்ட சரிசமமான வலிமையுள்ள இரு அணிகளுக்கிடையேயான ஆட்டமாகவே பார்க்கப்பட்டது.
ISL 2019-20 : பலம் கொண்ட ஏடிகே அணியை சந்திக்கும் ஒடிசா.. வெற்றி யாருக்கு? பரபர மோதல்!
டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 13வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியின் மிலனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 21வது நிமிடத்தில் அதே அணியின் பிரதானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் தனது அணியில் 24வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 35வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஒபிச்சிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 44வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் வாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வரும் நிலையிலும் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், இரண்டு கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்படியும் யாரும் கோல் அடிக்கவில்லை. முதல் பாதியும் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், அதாவது 46வது நிமிடத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. அதன் பிறகும் இரண்டு அணிகளும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் யாராலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் யாரும் ஒரு கோல் கூட அடிக்காமலேயே ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமோ என்று பார்வையாளர்கள் பதட்டம் ஆனார்கள். 81வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கல்லெகாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர், எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் தங்கள் அணிகளில் மாற்றங்களை செய்தார்கள். ஆட்டம் முடிவுக்கு வரும் சமயத்தில் மூன்று நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டன. 90வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மோஸ்ட் மவுஸ்தபாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாரும் ஒரு கோல் கூட அடிக்காமலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.
Photos Courtesy : ISL Media